இலங்கைக்கு எதிரான 3-வது டி20 போட்டி: பந்து வீசியதன் பின்னணியை பகிர்ந்த ரிங்கு சிங்


இலங்கைக்கு எதிரான 3-வது டி20 போட்டி: பந்து வீசியதன் பின்னணியை பகிர்ந்த ரிங்கு சிங்
x

இலங்கைக்கு எதிரான 3-வது டி20 போட்டியில் ரிங்கு சிங் அபாரமாக பந்து வீசி 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

பல்லகெலெ,

இந்தியா - இலங்கை இடையிலான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நேற்று முன்தினம் நிறைவடைந்தது. இதில் நடைபெற்ற 3-வது மற்றும் கடைசி டி20 போட்டியில் இலங்கையை சூப்பர் ஓவரில் இந்தியா தோற்கடித்து திரில் வெற்றியை பெற்றது.

அதன்படி நடைபெற்ற அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 20 ஓவர்களில் 137 ரன்கள் அடித்தது. அதைத் தொடர்ந்து சேசிங் செய்த இலங்கையும் 20 ஓவர்களில் 137 ரன்கள் அடித்ததால் போட்டி சமனில் முடிந்தது. அதைத் தொடர்ந்து வெற்றியாளரை தீர்மானிப்பதற்காக நடத்தப்பட்ட சூப்பர் ஓவரில் வாஷிங்டன் சுந்தர் 2 ரன்கள் மட்டும் கொடுத்து 2 விக்கெட் எடுத்து இலங்கையை சுருட்டினார். அதன் பின் சூப்பர் ஓவரின் முதல் பந்திலேயே பவுண்டரி அடித்த சூர்யகுமார் இந்தியாவை எளிதாக வெற்றி பெற வைத்தார்.

முன்னதாக அந்தப் போட்டியில் இலங்கை அணியின் வெற்றிக்கு கடைசி 12 பந்துகளில் வெறும் 9 ரன்கள் தேவைப்பட்டதால் எளிதில் வெற்றி பெறும் என்று அனைவரும் நினைத்தனர்.

ஆனால் 19வது ஓவரை இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் யாரும் எதிர்பார்க்காத வகையில் ரிங்கு சிங்கிடம் கொடுத்தார். அந்த ஓவரில் வெறும் 3 ரன்கள் மட்டுமே கொடுத்த ரிங்கு சிங் 2 விக்கெட்டுகள் எடுத்து இந்தியாவை வெற்றிப்பாதைக்கு திரும்ப வைத்தார். இறுதியில் 6 ரன்கள் தேவைப்பட்ட போது கேப்டன் சூர்யகுமார் 5 ரன்கள் மட்டுமே கொடுத்து 2 விக்கெட்டுகள் எடுத்து இந்தியாவை வெற்றி பெற வைத்தார்.

இந்நிலையில் இத்தொடர் தொடங்குவதற்கு முன்பாகவே பந்து வீச தயாராக இருக்குமாறு கேப்டன் சூர்யகுமார் தம்மிடம் சொன்னதாக ரிங்கு சிங் கூறியுள்ளார். இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:-

"உள்ளூர் கிரிக்கெட்டில் நான் சில விக்கெட்டுகளை எடுத்துள்ளேன். இந்தியாவுக்காக ஒருநாள் கிரிக்கெட்டிலும் 1 விக்கெட் எடுத்துள்ளேன். அதனால் இந்த தொடரில் பந்து வீச தயாராக இருக்குமாறு சூர்யா என்னிடம் கூறியிருந்தார். இந்தப் போட்டிக்காக நான் ஆரம்பத்தில் பந்து வீச பயிற்சி எடுக்கவில்லை. இருப்பினும் பவுலிங் செய்ய தயாராகுமாறு சூர்யா பாய் என்னிடம் கூறியிருந்தார். ஆனால் இப்போட்டியில் அதுவும் கடினமான சூழ்நிலையில் அவர் என்னை பந்து வீச அழைப்பார் என்று நான் எதிர்பார்க்கவில்லை" என்று கூறினார்.


Next Story