ஈசனின் அருளைப் பெற்ற நந்தியம்பெருமான்


ஈசனின் அருளைப் பெற்ற நந்தியம்பெருமான்
x

நந்தியின் அருள் இருந்தால்தான் மனிதர்களுக்கு மட்டுமின்றி தேவர்களுக்கும் முக்தி கிடைக்கும். இந்த உலகத்தில் எதையும் கண்டிக்கவும், தண்டிக்கவும் செய்வதற்கான அதிகாரத்தை, நந்திக்கு சிவபெருமான் வழங்கியிருக்கிறார்.

அதனாலேயே தேவர்களும் நந்திதேவரைப் போற்றித் துதிக்கின்றனர். எல்லா உயிர் களையும் ஒரு காலத்தில் ஓய்வு படுத்துதலை 'மகாசங்காரம்' என்கிறார்கள். இந்த அதிகாரத்தை சிவபெருமான், நந்தி தேவருக்கு அளித்திருக்கிறார்.

நந்திதேவருக்கு 'ருத்திரன்' என்ற பெயரும் உண்டு. இதற்கு 'துக்கத்தை ஓட்டுகிறவன்' என்று பொருள். அதே போல் தூயவன், சைலாதி எனவும் நந்தியை அழைப்பார்கள். மாலாங்கன், இந்திரன், சோமன், பிரம்மன், கந்துரு, காலாங்கி, கஞ்சமாலையன் போன்ற தேவர்களெல்லாம் நந்தியைக் குருவாகக் கொண்டு வேதம் கற்றவர்கள் ஆவர்.

நாட்டியம் பயில்வோரும் இசை பயில்வோரும் நந்தியை வழிபட்டால் அவர்களின் கலைகள் சிறந்து விளங்கும். நந்திதேவருக்கு அருகம்புல் மாலையும், சிவப்பு அரிசி நைவேத்தியமும், நெய் விளக்கு தீபமும் வைத்து வழிபட வேண்டும்.

நந்தியை வழிபடும்போது, `சிவனடியில் சரண் புகுந்து சிவ தியானத்தில் ஆழ்ந்திருக்கும் நந்தியம்பெருமானே.. மூலவர் சன்னிதிக்குச் சென்று உமையவளோடு அருளும் ஈஸ்வரனைத் தரிசிக்க எனக்கு உத்தரவு தாருங்கள்' என்று பிரார்த்திக்க வேண்டும்.

சிவபெருமானின் முக்கண்ணின் பார்வைக்கு எதிரில் நிற்க நந்திதேவரைத் தவிர வேறு யாராலும் இயலாது. இது சிவபெருமானே நந்திதேவருக்கு அளித்த வரமாகும்.

சிவபெருமான் திருநடனம் புரிகையில் நந்திதேவரே மத்தளம் வாசித்ததாக சிவபுராணம் கூறுகிறது. பிரதோஷ காலம் மட்டுமின்றி எக்காலத்தும் நாம் சிவபெருமானிடம் வைக்கும் வேண்டுதல்களை நந்திதேவரிடம் வைத்தால் போதும். அவர் அதைப் பரமேஸ்வரனிடம் கொண்டு சேர்த்துவிடுவார் என்பது ஐதீகம்.


Next Story