தீபங்களும்.. அதன் வகைகளும்..


தீபங்களும்.. அதன் வகைகளும்..
x

தீப வழிபாடு என்பது நம் கலாசாரத்துடன் இரண்டறக் கலந்தது ஆகும். நாம் வசிக்கும் வீட்டில் தினமும் காலை, மாலை இரண்டு வேளைகளிலும் தீபம் ஏற்றிவைத்து, அந்த தீபத்தை வணங்கி வந்தால், தீய சக்திகள் யாவும் விலகி, வீட்டில் லட்சுமி கடாட்சம் பெருகும் என்கின்றன ஞான நூல்கள்.

மேலும் வீட்டில் தீபம் ஏற்றி வைத்து வழிபடுவதால் சுபம், ஆரோக்கியம், நன்மை, தன வரவு அதிகரித்தல், நல்லபுத்தி ஆகியவை பெருகும். தீபங்களுக்கு என்று ஒரு வழிபாடு பின்பற்றப்பட்டு வருகிறது. அதாவது தமிழ் மாதத்தில் தீபத்தை சிறப்பிக்கும் மாதம் திருக்கார்த்திகை ஆகும். இந்த திருக்கார்த்திகை மாதத்தில் இல்லத்தில் திரு விளக்கேற்றி வழிபடுவது மிகவும் விஷேசமாகும்.

தீபத்தில் மகாலட்சுமி வசிப்பதால், தீபம் ஏற்றியதும் `தீபலட்சுமியே நமோ நம' என்று கூறி வணங்குவது அவசியம். தீபத்தில் பலவகைகள் உண்டு. அவற்றை இங்கே பார்க்கலாம்.

சித்ர தீபம்: வீட்டின் தரையில் வண்ணப் பொடிகளால் சித்திரக் கோலம் இட்டு, அதன்மீது ஏற்றப்படும் தீபம் `சித்ர தீபம்' ஆகும்.

மாலா தீபம்: அடுக்கடுக்கான தீபத் தட்டுகளில் ஏற்றப்படும் தீபம் `மாலா தீபம்' ஆகும்.

ஆகாச தீபம்: வீட்டின் வெளிப்புறத்தில் உயர்ந்த பகுதியில் ஏற்றிவைக்கப்படும் தீபம் `ஆகாச தீப'மாகும். கார்த்திகை மாதம் சதுர்த்தி திதிநாளில் இந்த தீபத்தை ஏற்றி வழிபட்டால், எம பயம் நீங்கும்.

ஜல தீபம்: தீபத்தை ஏற்றி நதி நீரில் மிதக்கவிடப்படும் தீபத்திற்கு `ஜல தீபம்' என்று பெயர்.

படகு தீபம்: கங்கை நதியில் மாலைவேளையில் வாழை மட்டையின் மீது தீபம் ஏற்றிவைத்தும், படகு வடிவங்களில் தீபங்கள் ஏற்றி வைத்தும் கங்கையில் மிதக்கவிடுவதற்கு பெயர் `படகு தீபம்' ஆகும்.

சர்வ தீபம்: வீட்டின் அனைத்து பாகங்களிலும் வரிசையாக ஏற்றிவைக்கப்படுபவை `சர்வ தீப'மாகும்.

மோட்ச தீபம்: முன்னோர் நற்கதியடையும் பொருட்டு, கோவில் கோபுரங்களின் மீது ஏற்றி வைக்கப்படும் தீபம் `மோட்ச தீபம்' ஆகும்.

சர்வாலய தீபம்: கார்த்திகை மாதம் பவுர்ணமி அன்று, மாலைவேளையில் சிவன் கோவில்களில் ஏற்றப்படுவது `சர்வாலய தீப'மாகும்.

அகண்ட தீபம்: மலை உச்சியில் பெரிய கொப்பரையில் ஏற்றப்படுவது `அகண்ட தீபம்' ஆகும்.

லட்ச தீபம்: ஒரு லட்சம் விளக்குகளால் கோவிலை அலங்கரிப்பது `லட்சதீப'மாகும்.

மாவிளக்கு தீபம்: அரிசி மாவில் வெல்லம் போட்டு, இளநீர் விட்டுப் பிசைந்து உருண்டையாக்கி, நடுவில் குழித்து நெய் ஊற்றி திரிபோட்டு ஏற்றுவது `மாவிளக்கு தீபம்' ஆகும்.


Next Story