ஆடி அமாவாசையையொட்டி ராமேஸ்வரத்தில் குவிந்த பக்தர்கள்


ஆடி அமாவாசையையொட்டி ராமேஸ்வரத்தில் குவிந்த பக்தர்கள்
x

அக்னி தீர்த்த கடற்கரையில் குவிந்த பக்தர்கள், முன்னோருக்கு தர்ப்பணம் செய்து வருகின்றனர்.

ராமேசுவரம்,

அகில இந்திய புண்ணிய தலங்களில் ஒன்றாக கருதப்படும் ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலுக்கு தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர். அதிலும் குறிப்பாக தை, ஆடி அமாவாசை மற்றும் புரட்டாசி மாத மகாளய அமாவாசை நாட்களில் பக்தர்களின் கூட்டம் வழக்கத்திற்கு அதிகமாகவே இருக்கும்.

இந்த நிலையில், இன்று ஆடி அமாவாசையையொட்டி ராமேஸ்வரத்தில் அதிகாலை முதலே பக்தர்கள் குவிந்து வருகின்றனர். அக்னி தீர்த்த கடலில் குவிந்த பக்தர்கள் முன்னோர்களுக்கு திதி மற்றும் தர்ப்பணம் அளித்து பிரார்த்தனை செய்து வருகின்றனர். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் ராமேஸ்வரத்தில் குவிந்துள்ளனர்.

அதைபோல் ராமநாத சுவாமி கோயிலில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர். இதனால் கோவில் வளாகம், அக்னிதீர்த்த கடற்கரை உள்ளிட்ட பகுதிகளில் பக்தர்கள் கூட்டம் மிகவும் அதிகரித்து காணப்படுகிறது.அதேபோல கோயிலில் உள்ள 22 புண்ணிய தீர்த்தங்களிலும் நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருக்கின்றனர். இதனால் கோவில் வளாகம் மற்றும் அக்னி தீர்த்த கடற்கரையில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

தற்போது ராமநாதசாமி கோவிலில் ஆடி திருக்கல்யாண திருவிழா கடந்த 29-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் 7-ம் நாளான இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஆடி அமாவாசையை முன்னிட்டு காலை 11 மணிக்கு தங்க கருட வாகனத்தில் ராமபிரான் அக்னி தீர்த்த கடற்கரைக்கு தீர்த்தவாரி பூஜைக்கு எழுந்தருள உள்ளார்.


Next Story