நெல்லையில் ஆனித் திருவிழா.. தேரோட்டத்திற்கு தயார் நிலையில் நெல்லையப்பர் தேர்


Nellaiappar Temple Aani Festival Chariot
x

ஆனித் திருவிழாவின் ஐந்தாம் நாளான நேற்று வெள்ளி ரிஷப வாகனத்தில் சுவாமி-அம்பாள் எழுந்தருளி வீதி உலா நடைபெற்றது.

நெல்லை:

நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவிலில் ஆனிப் பெருந்திருவிழா 13-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் காலையிலும், மாலையிலும் சுவாமி- அம்பாள் வீதி உலா நடக்கிறது

திருவிழாவின் 5-ம் நாளான நேற்று அதிகாலை 5 மணிக்கு சுவாமி- அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடந்தது. காலை 8 மணிக்கு உற்சவருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதைத்தொடர்ந்து வெள்ளி ரிஷப வாகனத்தில் சுவாமி-அம்பாள் எழுந்தருளி வீதி உலா நடைபெற்றது.

அப்பர், திருஞானசம்பந்தர், சுந்தரமூர்த்தி நாயனார், நந்தி தேவர், சண்டிகேஸ்வரர் சப்பரத்தில் எழுந்தருளி வீதி உலா நடந்தது. தொடா்ந்து அனுப்புகை மண்டபத்தில் சுவாமி நெல்லையப்பர்-காந்திமதி அம்பாளுக்கு சிறப்பு அலங்கார தீபாராதனை நடந்தது. இரவில் சுவாமி நெல்லையப்பர்-, காந்திமதி அம்பாள் இந்திர வாகனத்திலும் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி கொடுத்தனர். தொடா்ந்து சுவாமி அம்பாள், விநாயகா், சுப்பிரமணியர் ஆகியோருக்கு சோடச உபசார தீபாராதனை நடந்தது.

பின்னா் பஞ்ச வாத்தியங்கள் முழங்க சுவாமி-அம்பாள் குடவரை வாயில் தீபாராதனையுடன் கோவிலின் வெளியே வந்தனா். நெல்லை சிவகணங்கள் பஞ்ச வாத்திய இசையில் மங்கள வாத்தியங்கள் முழங்க 4 ரத வீதிகளிலும் வீதிஉலா நடந்தது. அப்போது வேதபாராயணம் மற்றும் சிவனடியாா்களால் பன்னிரு திருமுறை பாராயணமும் பாடப்பட்டது. இதில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமி தாிசனம் செய்தனா்.

கோவில் நின்ற சீர் நெடுமாறன் கலையரங்கத்தில் செந்தில் கணேஷ்- ராஜலட்சுமி குழுவினரின் கிராமிய இசை நிகழ்ச்சிகளும், நெல்லையை சேர்ந்த நாட்டிய பள்ளி மாணவிகளின் பரதநாட்டிய நிகழ்ச்சிகளும் நடந்தது.

விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 21-ந்தேதி (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. பெரிய தேரான நெல்லையப்பர் தேரில் சாரம் கட்டும் பணி, குதிரை உள்ளிட்ட பொம்மைகள் பொருத்தும் பணி, அலங்கார துணிகள் கட்டும் பணிகள் நேற்று முடிவுற்று வடமும் கட்டப்பட்டுள்ளது. தொடர்ந்து தேரோட்டத்துக்கு தயார் நிலையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.


Next Story