ஏடன் வளைகுடாவில் சரக்கு கப்பலை குறிவைத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்


ஏடன் வளைகுடாவில் சரக்கு கப்பலை குறிவைத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்
x

Image Courtesy ; File Photo (AFP)

ஏடன் வளைகுடாவில் சென்றுகொண்டிருந்த சரக்கு கப்பலை குறிவைத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தினர்.

சனா,

காசா முனையில் செயல்பட்டு வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த ஆண்டு அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர்.

மேலும், இஸ்ரேலில் இருந்து 251 பேரை பணய கைதிகளாக காசாமுனைக்கு ஹமாஸ் கடத்தி சென்றது.

இதையடுத்து ஹமாஸ் ஆயுதக்குழு மீது போர் அறிவித்த இஸ்ரேல் ஒப்பந்த அடிப்படையில் பணய கைதிகள் 100க்கும் மேற்பட்டோரை மீட்டுள்ளது.

ஆனால், 100க்கும் மேற்பட்டோ இன்னும் பணய கைதிகளாக ஹமாஸ் பிடியில் உள்ளதாகவும், அதில் சிலர் உயிரிழந்திருக்கலாம் எனவும் இஸ்ரேல் தெரிவித்துள்ளது. மேலும், காசாவில் இஸ்ரேல் அதிரடி தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த போரில் காசாவில் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் உள்பட 38 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அதேபோல், மேற்குகரையில் ஏற்பட்ட மோதலில் 500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். காசா முனையில் இஸ்ரேல் படையினரும் 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

இதனிடையே, இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போரில் ஹமாஸ் ஆயுதக்குழுவினருக்கு ஏமனில் செயல்பட்டு வரும் ஹவுதி கிளர்ச்சியாளர்களும், லெபனானில் செயல்பட்டு வரும் ஹிஸ்புல்லா பயங்கரவாதிகளும் ஆதரவு அளித்து வருகின்றனர்.

ஹமாசுக்கு ஆதரவு அளிக்கும் வகையிலும், இஸ்ரேலுக்கு எதிரான நடவடிக்கை என்ற பெயரில் அரபிக்கடல், செங்கடலில் செல்லும் சரக்கு கப்பல்களை குறிவைத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். அதேவேளை, கடந்த மாதம் 19ம் இஸ்ரேலின் டெல் அவிவ் நகர் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் டிரோன் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் ஒருவர் உயிரிழந்தார். இந்த தாக்குதலுக்கு பதிலடியாக ஏமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ள ஹூடைடா துறைமுகம் மீது கடந்த மாதம் 20ம் தேதி இஸ்ரேல் விமானப்படை அதிரடி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 5க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு பின் அரபிக்கடல், செங்கடல் பகுதிகளில் ஹவுதி கிளர்ச்சியாளர்களின் தாக்குதல் குறைந்தது.

இந்நிலையில், அரபிக்கடலின் ஏடன் வளைகுடாவில் சென்றுகொண்டிருந்த சரக்கு கப்பலை குறிவைத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நேற்று மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளனர். லைபிரியா நாட்டிற்கு சொந்தமான இக்கப்பல் ஏடன் வளைகுடா வழியாக டிஜிபோதி நாட்டிற்கு சென்றுகொண்டிருந்தது. அந்த கப்பலை குறிவைத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளனர். ஏமன் நாட்டின் ஏடன் துறைமுகத்தில் இருந்து 125 நாட்டிகல் மைல் தொலைவில் சென்றுகொண்டிருந்த கப்பலை குறிவைத்து இந்த ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் ஏற்பட்ட பாதிப்பு குறித்த தகவல் இதுவரை வெளியாகவில்லை.


Next Story