செங்கடலில் சரக்கு கப்பல்களை குறிவைத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்


செங்கடலில் சரக்கு கப்பல்களை குறிவைத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்
x

செங்கடலில் சரக்கு கப்பல்களை குறிவைத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தினர்.

சனா,

காசா முனையில் செயல்பட்டு வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த ஆண்டு அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். மேலும், இஸ்ரேலில் இருந்து 251 பேரை பணய கைதிகளாக காசாமுனைக்கு ஹமாஸ் கடத்தி சென்றது.

இதையடுத்து ஹமாஸ் ஆயுதக்குழு மீது போர் அறிவித்த இஸ்ரேல் ஒப்பந்த அடிப்படையில் பணய கைதிகள் 105 பேரை மீட்டது. மேலும், அதிரடி மீட்பு நடவடிக்கை மூலம் பணய கைதிகள் சிலரை இஸ்ரேல் மீட்டுள்ளது. அதேபோல், ஹமாஸ் ஆயுதக்குழுவினர்களால் கடத்தப்பட்டு கொல்லப்பட்ட பணய கைதிகளின் உடல்களும் மீட்கப்பட்டுள்ளன.

ஆனால், 100க்கும் மேற்பட்டோர் இன்னும் பணய கைதிகளாக ஹமாஸ் பிடியில் உள்ளதாகவும், அதில் சிலர் உயிரிழந்திருக்கலாம் எனவும் இஸ்ரேல் தெரிவித்துள்ளது. மேலும், காசாவில் இஸ்ரேல் அதிரடி தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த போரில் காசாவில் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் உள்பட 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அதேபோல், மேற்குகரையில் ஏற்பட்ட மோதலில் 600க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

இதனிடையே, இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போரில் ஹமாஸ் ஆயுதக்குழுவினருக்கு ஏமனில் செயல்பட்டு வரும் ஹவுதி கிளர்ச்சியாளர்களும், லெபனானில் செயல்பட்டு வரும் ஹிஸ்புல்லா பயங்கரவாதிகளும் ஆதரவு அளித்து வருகின்றனர்.

ஹமாசுக்கு ஆதரவு அளிக்கும் வகையிலும், இஸ்ரேலுக்கு எதிரான நடவடிக்கை என்ற பெயரில் அரபிக்கடல், செங்கடலில் செல்லும் சரக்கு கப்பல்களை குறிவைத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

அந்த வகையில், செங்கடலில் சென்றுகொண்டிருந்த எண்ணெய் கப்பல் மீது கடந்த 21ம் தேதி ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தினர். இதையடுத்து கப்பலில் இருந்த மாலுமிகள் 30 பேரை பிரான்ஸ் கடற்படையினர் மீட்டனர். ஆனால், 1 மில்லியன் பேரல் எண்ணெய் உடன் பயணித்த அந்த கப்பல் கைவிடப்பட்டது.

இந்நிலையில், செங்கடலில் ஏற்கனவே கைவிடப்பட்ட அந்த எண்ணெய் கப்பல் மீதும் மற்றொரு சரக்கு கப்பல் மீதும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் இன்று ஏவுகணை தாக்குதல் நடத்தினர். இதில் சரக்கு கப்பல் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் கப்பல்மீதோ, மாலுமிகளுக்கோ எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. ஆனால் எண்ணெய் கப்பல் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் கப்பலில் தீப்பற்றியுள்ளது. தீப்பற்றியுள்ள கப்பலில் 1 மில்லியன் பேரல் எண்ணெய் இருப்பதால் ஒருவேளை கப்பல் முழுவதும் தீ பரவும் பட்சத்தில் கடற்பரப்பில் மிகப்பெரிய பாதிப்பு ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது. அந்த கப்பலில் பற்றியுள்ள தீயை அணைக்க இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளின் கடற்படையினர் முயற்சிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.


Next Story