சுடப்பட்ட சுலோவேக்கியா பிரதமர்: 'இனி உயிருக்கு ஆபத்து இல்லை' - அமைச்சர் தகவல்


சுடப்பட்ட சுலோவேக்கியா பிரதமர்: இனி உயிருக்கு ஆபத்து இல்லை - அமைச்சர் தகவல்
x

சுலோவேக்கியா பிரதமர் மர்ம நபரால் துப்பாக்கியால் சுடப்பட்டார். அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.

பிரேக்,

மத்திய ஐரோப்பிய நாடான சுலோவேக்கியாவின் பிரதமராக இருந்து வருபவர் ராபர்ட் பிகோ (வயது 59). ஏற்கனவே 2 முறை பிரதமர் பதவி வகித்துள்ள ராபர்ட் பிகோ கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் மீண்டும் பிரதமர் ஆனார்.

இதன் மூலம் அந்த நாட்டின் வரலாற்றில் நீண்ட காலம் பிரதமராக இருந்தவர் என்கிற பெருமையை அவர் பெற்றார். நாட்டு மக்களிடையே மிகுந்த செல்வாக்கு பெற்ற பிரதமரான ராபர்ட் பிகோ, ரஷியா ஆதரவாளரும் ஆவார். அவர் நேற்று தலைநகர் பிராடிஸ்லாவாவில் இருந்து 150 கி.மீ. தொலைவில் உள்ள ஹண்ட்லோவா நகரில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அங்கு திரண்டிருந்த அவரது ஆதரவாளர்களிடம் ராபர்ட் பிகோ உரையாடி கொண்டிருந்தார்.

அப்போது கூட்டத்தில் இருந்த மர்ம நபர் ஒருவர் பிரதமர் ராபர்ட் பிகோவை துப்பாக்கியால் சரமாரியாக சுட்டார். இதில் ராபர்ட் பிகோவின் வயிற்றில் 4 துப்பாக்கி குண்டுகள் துளைத்தன. இதில் பலத்த காயமடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் சரிந்தார். இதனால் அங்கு பெரும் பரபரப்பும், குழப்பமும் ஏற்பட்டது.

துப்பாக்கி சூட்டில் பலத்த காயமடைந்த ராபர்ட் பிகோவை அதிகாரிகள் மீட்டு ஹெலிகாப்டர் மூலம் சுமார் 29 கி.மீ. தொலைவில் உள்ள பன்ஸ்கா பிஸ்ட்ரிகா நகரில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு டாக்டர் குழுவினர் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், அடுத்த 4 மணி நேரம் மிகவும் சிக்கலானது என ஆஸ்பத்திரி வட்டாரங்கள் தெரிவித்தன.

இதற்கிடையே பிரதமர் ராபர்ட் பிகோவை துப்பாக்கியால் சுட்ட மர்ம நபரை போலீசார் மடக்கிப்பிடித்து கைது செய்தனர். அவரிடம் துப்பாக்கி சூட்டுக்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது. பிரதமர் சுடப்பட்ட தகவலை அதிபர் ஜுவானா கேபுடோவா தொலைக்காட்சி மூலம் நாட்டு மக்களுக்கு அறிவித்தார். பதவியில் இருந்து வெளியேறும் அதிபரான ஜுவானா, இந்த தாக்குதலை ஜனநாயகத்தின் மீது தொடுக்கப்பட்ட தாக்குதல் என தெரிவித்தார்.

இதைப்போல புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பீட்டர் பெல்லரினியும் இந்த தாக்குதலை கண்டித்து இருப்பதுடன், இது சுலோவேக்கியா வரலாற்றில் இதுவரை இல்லாதது என கண்டனம் தெரிவித்தார்.

இந்நிலையில் அரசாங்கக் கூட்டம் ஒன்றில் இருந்து வெளியேறிய துணைப் பிரதமர் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர் டோமஸ் தாராபார் செய்தியாளர்களிடம் கூறுகையில், ""நான் மிகவும் அதிர்ச்சியடைந்தேன். ஒரு புல்லட் பிகோவின் வயிற்றில் சென்றுள்ளது. இரண்டாவது ஒரு மூட்டில் தாக்கியுள்ளது. அதிர்ஷ்டவசமாக அறுவை சிகிச்சை சிறப்பான முறையில் நடந்தது. கண்டிப்பாக அவர் உயிர் பிழைத்து விடுவார் என்று நினைக்கிறேன். தற்போது அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் இல்லை" என்று அவர் கூறினார்.

சுலோவேக்கியா பிரதமர் துப்பாக்கி சூட்டுக்கு ஆளாகியிருப்பது ஐரோப்பியா முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஐரோப்பிய நாடுகள் மட்டுமின்றி பல்வேறு நாடுகளின் தலைவர்களும் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.


Next Story