லெபனானை தொடர்ந்து சிரியா மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்


லெபனானை தொடர்ந்து சிரியா மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்
x

கோப்புப்படம்

சிரியா நாட்டின் டமாஸ்கஸ் நகரில் இஸ்ரேல் நடத்திய வான் தாக்குதலில் 3 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

டமாஸ்கஸ்,

ஹிஸ்புல்லா அமைப்புக்கு ஆதரவாக செயல்பட்டு வரும் ஈரான், நேற்று இஸ்ரேல் மீது சரமாரியாக ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடி கொடுத்தால் தாக்குதல் இன்னும் தீவிரமாக இருக்கும் என்றும் எச்சரித்துள்ளது. இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் ஹிஸ்புல்லா அமைப்பின் முக்கிய தலைவர்கள் கொல்லப்பட்டதற்கு பதிலடியாக ஈரான் இந்த தாக்குதலை நடத்தி உள்ளது. இதனால் மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றம் அதிகரித்துள்ளது.

இது ஒருபுறமிருக்க, லெபனானில் ஹிஸ்புல்லா அமைப்பினருக்கு எதிரான புதிய தாக்குதலுக்கு இஸ்ரேல் தயாரானது. தெற்கு லெபனானில் உள்ள பல கிராமங்களில் வசிக்கும் மக்கள் அங்கிருந்து வெளியேறும்படி, இஸ்ரேல் ராணுவம் எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டது. இதன்படி லெபனான் மீது வான் தாக்குதலை இஸ்ரேல் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. போர் பதற்றம் அதிகரித்திருப்பதால், ஒருசில நாடுகள் லெபனானில் உள்ள தங்கள் நாட்டு மக்களை வெளியேற்றத் தொடங்கி உள்ளன.

இந்நிலையில் இஸ்ரேலிய விமானத் தாக்குதலில் சிரியா தலைவர் டமாஸ்கஸில் மூன்று பேர் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதுதொடர்பாக பிரிட்டனை தளமாகக் கொண்ட மனித உரிமைகளுக்கான சிரிய கண்காணிப்பு அமைப்பு கூறுகையில், "ஹிஸ்புல்லா தலைவர்கள் மற்றும் ஈரானிய புரட்சியாளர்கள் அடிக்கடி சந்தித்து கொள்ளும் குடியிருப்பு கட்டிடத்தில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பை குறிவைத்து இஸ்ரேலிய வான் தாக்குதல் நடத்தியது. இந்த சம்பவத்தில் 3 பேர் கொல்லப்பட்டனர். அவர்களில் இருவர் வெளிநாட்டினர்" என்று தெரிவித்துள்ளது.

லெபனானை தொடர்ந்து சிரியா மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல் நடத்தி உள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story