ஏமன் கடற்கரை அருகே செங்கடலில் சென்ற கப்பல் மீது தாக்குதல்


ஏமன் கடற்கரை அருகே செங்கடலில் சென்ற கப்பல் மீது தாக்குதல்
x

Image Courtesy : AFP 

ஏமன் கடற்கரை அருகே செங்கடலில் சென்ற கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

சனா,

ஏமன் நாட்டில் இயங்கி வரும் ஹவுதி அமைப்பினர், காசா முனையில் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலை கண்டித்து கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் செங்கடலில் பயணிக்கும் இஸ்ரேலுக்கு சொந்தமான கப்பல்கள் மீது தாக்குதல் நடத்த தொடங்கினர். இந்த தாக்குதலுக்கு பதிலடியாக அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் ஒன்றிணைந்து ஏமனில் உள்ள ஹவுதி இலக்குகள் மீது வான்வழி தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் ஏமன் கடற்கரை அருகே செங்கடலில் சென்ற கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏமனில் உள்ள அல் ஹுதாயா துறைமுகத்திற்கு வடகிழக்கில் சுமார் 150 கடல் மைல்கள்(277 கி.மீ.) தொலைவில் இந்த தாக்குதல் நிகழ்ந்துள்ளது. கப்பலுக்கு மிக அருகில் 5 ஏவுகணைகள் ஏவப்பட்டதாகவும், இந்த தாக்குதலில் கப்பலுக்கு சேதம் எதுவும் ஏற்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தாக்குதல் குறித்து இங்கிலாந்து கடல்சார் வணிக கட்டுப்பாட்டு மையத்திற்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், இங்கிலாந்து கடற்படையினர் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் செங்கடல் வழியே பயணிக்கும் கப்பல்கள் மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும் எனவும், ஏதேனும் சந்தேகத்திற்குரிய கப்பல்கள் தென்பட்டால் உடனடியாக தகவல் தெரிவிக்குமாறும் இங்கிலாந்து கடற்படை அறிவுறுத்தியுள்ளது.


Next Story