ஆப்கானிஸ்தான்: கனமழை, வெள்ளத்தால் பலியானோர் எண்ணிக்கை 300 ஆக உயர்வு


Afganistan  flood
x
தினத்தந்தி 11 May 2024 10:50 AM GMT (Updated: 11 May 2024 1:38 PM GMT)

வெள்ளம் முழுமையாக வடிந்த பின்னர்தான் உயிரிழப்புகள் எவ்வளவு என்பது தெரிய வரும் என அந்நாட்டு அதிகாரிகள் கூறியுள்ளனர்.

காபுல்,

ஆப்கானிஸ்தான் நாட்டின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. அந்நாட்டின் தலைநகர் காபுல், பஹ்லன் மாகாணம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டித்தீர்த்தது.

கனமழையால் பல்வேறு ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பல நகரங்களை வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. சாலை போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. பலர் வீடுகளை இழந்துள்ளனர்.

இந்நிலையில், கனமழை மற்றும் வெள்ளத்தால் இதுவரை 300 பேர் உயிரிழந்துள்ளதாக புலம்பெயர்ந்தோர்களுக்கான ஐநாவின் சர்வதேச அமைப்பு தெரிவித்துள்ளது.

கனமழை காரணமாக ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் சேதம் அடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். ஆயிரக்கணக்கான மக்கள் தங்க இடமின்றி தவித்து வருகின்றனர். வெள்ளம் முழுமையாக வடிந்த பின்னர்தான் உயிரிழப்புகள் எவ்வளவு என்பது தெரிய வரும் என அந்நாட்டு அதிகாரிகள் கூறியுள்ளனர்.

வடகிழக்கு மாகாணம் பாதாக்ஷன், மத்திய கோர் மாகாணம், மேற்கு ஹெராத் ஆகியவையும் கனமழையால் பாதிக்கப்பட்டுள்ளன. மேலும், பலர் படுகாயமடைந்துள்ளதால் மீட்பு நடவடிக்கையில் தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.


Next Story