கரும்பில் பூ பூத்ததால் மகசூல் பாதிப்பு


கரும்பில் பூ பூத்ததால் மகசூல் பாதிப்பு
x
தினத்தந்தி 2 Dec 2022 7:30 PM GMT (Updated: 2 Dec 2022 7:31 PM GMT)

பாலக்கோடு பகுதியில் கரும்பில் பூ பூத்ததால் மகசூல் பாதிக்கப்பட்டது. அரவை ஆலையை திறக்க விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.

தர்மபுரி

பாலக்கோடு:-

பாலக்கோடு பகுதியில் கரும்பில் பூ பூத்ததால் மகசூல் பாதிக்கப்பட்டது. அரவை ஆலையை திறக்க விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.

கரும்பு அரவை பணி

பாலக்கோட்டில் கூட்டுறவு சர்க்கரை ஆலை இயங்கி வருகிறது. தமிழ்நாட்டில் இயங்கும் 16 கூட்டுறவு சர்க்கரை ஆலைகளில் இதுவும் ஒன்றாகும். இந்த ஆலையில் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதத்தில் கரும்பு அரவை பணி நடைபெறும்.

இந்த கரும்பு ஆலைக்கு பாலக்கோட்டை சுற்றியுள்ள மல்லாபுரம், பெல்ராம்பட்டி, வெள்ளிச்சந்தை, கோடியூர், வெலாம்பட்டி, திம்மம்பட்டி, பஞ்சப்பள்ளி, மாரண்ட அள்ளி, சாமனூர், காரிமங்கலம் பெரியாம்பட்டி, தும்பலஅள்ளி போன்ற பகுதிகளில் உள்ள கரும்பு விவசாயிகள் தாங்கள் விளைவிக்கும் கரும்பை பதிவு செய்து ஆலைக்கு கொடுத்துவருகின்றனர்.

மகசூல் பாதிப்பு

இந்த ஆலையானது 4 லட்சம் டன் வரை சர்க்கரையை உற்பத்தி செய்து தேசிய அளவில் நற்சான்று பெற்ற ஆலைதான் பாலக்கோடு கூட்டுறவு சர்க்கரை ஆலை. தொடர் பருவமழை பொழிவினால் அதிக அளவில் கரும்பு பயிர் விவசாயம் செய்து வருகின்றனர். தற்போது கரும்பு அறுவடைக்கு தயாரான நிலையில் சர்க்கரை ஆலையில் அரவை பணி தொடங்கவில்லை. இதனால் அறுவடைக்கு தயாரான கரும்புகள் பூ பூக்க தொடங்கி விட்டது. இதனால் மகசூல் பாதிக்கப்பட்டதுடன் கரும்பு காய்ந்து எடை குறைந்து நஷ்டம் ஏற்படும் நிலை உள்ளது. எனவே தமிழக அரசு உரிய நடவடிக்கை மேற்கொண்டு சர்க்கரை ஆலையை உடனடியாக திறக்க வேண்டுமென கரும்பு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story