வாலாஜா - திருப்பெரும்புதூர் சாலையை 6 வழிச்சாலையாக மாற்றும் பணிகளை விரைவில் முடிக்க வேண்டும் - ராமதாஸ் வலியுறுத்தல்


வாலாஜா - திருப்பெரும்புதூர் சாலையை 6 வழிச்சாலையாக மாற்றும் பணிகளை விரைவில் முடிக்க வேண்டும் - ராமதாஸ் வலியுறுத்தல்
x
Sutharson 12 Aug 2024 8:02 AM GMT

திருப்பெரும்புதூர் - வாலாஜா சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது இது முதல் முறையல்ல என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

சென்னை,

பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

காஞ்சிபுரம், வேலூர் உள்ளிட்ட வட மாவட்டங்களில் பெய்து வரும் மழை காரணமாக சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையின், திருப்பெரும்புதூர் - வாலாஜா இடையிலான பகுதியில் இன்று காலை கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக வேலூரில் இருந்து சென்னை வரும் பாதையில் வாலாஜா, காஞ்சிபுரம் உள்ளிட்ட இடங்களில் ஏற்பட்ட நெரிசலால் பல கி.மீ தொலைவுக்கு ஊர்திகள் அணிவகுத்து நிற்கின்றன. இதற்கு காரணம் திருப்பெரும்புதூர் - வாலாஜா இடையிலான 6 வழிச் சாலைப் பணிகள் பல ஆண்டுகள் ஆகியும் இன்னும் முடிவடையாததுதான்.

திருப்பெரும்புதூர் - வாலாஜா சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது இது முதல் முறையல்ல. ஆகஸ்ட் மாதத்தின் 12 நாட்களில் மூன்றாவது முறையாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டிருக்கிறது. ஆனாலும், அதைத் தவிர்க்கவோ, முடங்கிக் கிடக்கும் பணிகளை விரைவுபடுத்தவோ இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. இது கண்டிக்கத்தக்கது. இதே நிலை நீடித்தால் இன்னும் இரு மாதங்களில் தொடங்கவுள்ள வடகிழக்குப் பருவமழைக் காலத்தில் இந்த சாலையில் பயணிப்பது மிக மோசமான அனுபவமாகி விடும்.

வாலாஜா - திருப்பெரும்புதூர் இடையிலான சாலையை 6 வழிச்சாலையாக மாற்றும் பணிகள் 2018-ஆம் ஆண்டின் இறுதியில் தொடங்கப்பட்டன. அடுத்த 3 ஆண்டுகளில் இந்தப் பணிகள் முடிக்கப்பட்டு, 2021ஆம் ஆண்டில் போக்குவரத்துக்கு சாலை திறக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், 6 ஆண்டுகள் நிறைவடைந்தும் கூட பணிகள் இன்னும் முடிவடையவில்லை. இதில் காரைப் பேட்டை - திருப்பெரும்புதூர் இடையிலான பணிகள் இதுவரை 57% மட்டுமே நிறைவடைந்திருக்கும் சூழலில் சாலை விரிவாக்கப்பணிகள் ஒப்பந்ததாரரால் முன்னறிவிப்பின்றி கைவிடப்பட்டிருக்கின்றன. அதனால், இந்தப் பணிகள் மீண்டும் எப்போது தொடங்கும், எப்போது முடியும்? என்பது யாருக்கும் தெரியவில்லை.

ஏற்கனவே பல முறை நான் சுட்டிக்காட்டியதைப் போல வாலாஜா - திருப்பெரும்புதூர் நெடுஞ்சாலை விரிவாக்கப்பணிகள் தாமதமடைந்து வருவதற்கு சென்னை உயர்நீதிமன்றம் கடுமையான கண்டனங்களைத் தெரிவித்திருக்கிறது. நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையமும், தமிழ்நாடு அரசும் இந்தத் திட்டப்பணிகளில் ஈடுபட்டுள்ள ஒப்பந்ததாரர்களை அழைத்துப் பேசி சாலை விரிவாக்கப் பணிகளை விரைவுபடுத்தி, அதிகபட்சமாக அடுத்த 6 மாதங்களுக்குள் முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுவரை அந்த சாலையில் சுங்கக்கட்டணம் வசூலிப்பதையும் நிறுத்த வேண்டும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story