கட்சியில் உரிய அங்கீகாரம் வழங்கப்படவில்லை... தமிழக வெற்றிக்கழக கூட்டத்தில் பெண் கடும் வாக்குவாதம்


கட்சியில் உரிய அங்கீகாரம் வழங்கப்படவில்லை... தமிழக வெற்றிக்கழக கூட்டத்தில் பெண் கடும் வாக்குவாதம்
x

கும்பகோணத்தில் நடந்த தமிழக வெற்றிக்கழக கூட்டத்தில் மாநில பொதுச்செயலாளரிடம் பெண் வாக்குவாதம் செய்தார்.

கும்பகோணம்,

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகத்ததை தொடங்கி உள்ளார். இந்த கட்சியின் முதல் மாநாடு என்பது அடுத்த மாதம் (அக்டோபர்) 27 ம் தேதி நடைபெற உள்ளது. மாநாட்டுக்கான ஏற்பாடுகள் விக்கிரவாண்டியில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தமிழக வெற்றிக்கழக கட்சியின் முதல் மாநாட்டிற்கான ஆலோசனைக் கூட்டம் தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் நேற்று நடந்தது. கூட்டத்தில் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கலந்து கொண்டார்.

கூட்டத்தில் அவர் பேசும்போது முன் வரிசையில் அமர்ந்திருந்த பெண் ஒருவர் புஸ்ஸி ஆனந்திடம் கடுமையாக வாக்குவாதம் செய்தார். அப்போது அவர், "தனது தம்பி பல ஆண்டுகளாக விஜய் ரசிகர் மன்றத்தில் உறுப்பினராக இருப்பதாகவும், அவருக்கான உரிய அங்கீகாரம் கட்சியில் வழங்கப்படவில்லை. அவர் ஓரங்கட்டப்பட்டுள்ளார். அதற்கான காரணத்தை நீங்கள் தெரிவிக்க வேண்டும். இதற்கு உடனே தீர்வு வேண்டும்" என புஸ்ஸி ஆனந்திடம் கேள்வி எழுப்பினார்.

அந்தப் பெண்ணின் வேண்டுகோளை கேட்ட புஸ்ஸி ஆனந்த், உங்களது புகாரை எழுதிக்கொடுங்கள். தீர்வு சொல்கிறோம் என்று கூறினார். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் புஸ்ஸி ஆனந்த் பேச்சை நிறுத்தி விட்டு அங்கிருந்து உடனடியாக கிளம்பி அடுத்த கூட்டத்துக்கு சென்று விட்டார். இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story