கூட்ட நெரிசல்: இறங்க முடியாததால் பெண் பயணி அவதி - ரெயிலை நிறுத்த எடுத்த திடீர் முடிவு


கூட்ட நெரிசல்: இறங்க முடியாததால் பெண் பயணி அவதி - ரெயிலை நிறுத்த எடுத்த திடீர் முடிவு
x

வாணியம்பாடி ரெயில் நிலையத்தில் பெண் பயணி இறங்குவதற்குள் ரெயில் புறப்பட்டு விட்டது.

ஜோலார்பேட்டை,

சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்திலிருந்து கர்நாடகா மாநிலம் பெங்களூருவுக்கு செல்லும் பிருந்தாவன் எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று காலை 7.40 மணியளவில் சென்னையில் இருந்து புறப்பட்டது. 3 நாட்கள் விடுமுறை என்பதால் பொதுப் பெட்டி மட்டுமின்றி முன் பதிவு செய்யப்பட்ட பெட்டியிலும் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது.

இந்த நிலையில் நேற்று காலை 10.51 மணியளவில் பிருந்தாவன் எக்ஸ்பிரஸ் ரெயில் திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி ரெயில் நிலையத்தை வந்தடைந்தது.

ரெயிலில் இருந்து பயணிகள் இறங்கிக்கொண்டு இருந்தனர். அப்போது பெண் பயணி ஒருவர் கூட்ட நெரிசலில் சிக்கி இறங்க முடியாமல் அவதிப்பட்டார். அவர் இறங்குவதற்குள் ரெயில் புறப்பட்டு விட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உடனடியாக ரெயிலின் அபாயம் சங்கிலியை பிடித்து இழுத்தார். ரெயில் நின்றதும் அவர் ரெயிலில் இருந்து இறங்கினார்.

இதுகுறித்து ரெயில்வே பாதுகாப்புப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது பயணிக்கும் போலீசாருக்கும் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டது. இதனால் ரெயில் சுமார் 10 நிமிடம் தாமதமாக ஜோலார்பேட்டை நோக்கி புறப்பட்டது.

இந்த சம்பவத்தால் வாணியம்பாடி ரெயில் நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story