பள்ளி பாடப்புத்தகங்களின் விலை உயர்வு ஏன் ? - அமைச்சர் விளக்கம்


பள்ளி பாடப்புத்தகங்களின் விலை உயர்வு ஏன் ? - அமைச்சர்  விளக்கம்
x

பள்ளி பாடப்புத்தகங்களின் விலை உயர்ந்தது ஏன் ? என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம் அளித்துள்ளார்.

சென்னை,

தமிழ்நாடு முழுவதும் மாநில பாடத்திட்டத்தின் கீழ் இயங்கி வரும் 1 முதல் 12ம் வகுப்பு வரை உள்ள வகுப்புகளில் கடந்த 2011-ம் ஆண்டு சமச்சீர் கல்வி முறை அமல்படுத்தப்பட்டது. இதன் மூலம் அரசு பள்ளிகள், அரசு உதவிபெறும் பள்ளிகள், தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு ஒரே பாடத்திட்டம் நடைமுறைக்கு வந்தது. வகுப்பு வாரியாக புத்தகங்களை அச்சிட்டு தமிழ்நாடு பாடநூல் நிறுவனம் வழங்கியது. அதன்படி, அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு இலவசமாகவும், தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவர்களுக்கு கட்டணம் நிர்ணயித்தும் புத்தகங்கள் வழங்கப்பட்டது. தொடர்ந்து ஆண்டுதோறும் வழங்கப்பட்டும் வருகிறது.இந்த நிலையில்,

நடப்பாண்டில் 1 முதல் பிளஸ்-2 வரையிலான வகுப்புகளுக்கு பாடப்புத்தகங்களின் பக்கங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப குறைந்தது ரூ,40 முதல் அதிகபட்சமாக ரூ,90 வரை விலை உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது,1 முதல் 4-ம் வகுப்பு புத்தகங்கள் ரூ,30 முதல் ரூ,40 வரையும், 5 முதல் 7-ம் வகுப்பு புத்தகங்கள் ரூ,30 முதல் 50 வரையும் உயர்த்தப்பட்டுள்ளன. மேலும், 8-ம் வகுப்பு புத்தகங்கள் ரூ,40 முதல் ரூ,70 வரையும், 9 முதல் பிளஸ்-2 வகுப்புகளுக்கு ரூ,50 முதல் ரூ,90 வரையும் விலை அதிகரிக்கப்பட்டுள்ளன..

இந்த நிலையில், பள்ளி பாடப்புத்தகங்களின் விலை உயர்ந்தது ஏன் ? என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம் அளித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தமிழ்நாட்டிலுள்ள அரசுப்பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவியர்களுக்கு விலையில்லாப் பாடநூல்கள் வழங்கப்பட்டு வருகிறது. தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவ / மாணவியர்களுக்கு நியாயமான விலையில் பாடநூல்கள் வழங்கப்பட்டு வருகிறது.முந்தைய ஆட்சிக்காலத்தில் 2015 -16 ஆம் கல்வியாண்டில் அதிகபட்சமாக 370 சதவிகிதமும், 2018 -19ம் கல்வியாண்டில் அதிகபட்சமாக 466 சதவிகிதமும் பாடநூல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. குறிப்பாக 11 ஆம் வகுப்பு புவியியல் பாடப்புத்தகம் 466 சதவிகிதம், 11-ம் வகுப்பு வணிகவியல் பாடப்புத்தகம் 325 சதவிகிதம், 11ம் வகுப்பு அரசியல் அறிவியல் பாடப்புத்தகம் 300 சதவிகிதம் என பாடநூல்கள் விலை அதிகபட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. அதற்கு முன்னதாக 2013-14ம் கல்வியாண்டிலும் பாடநூல்கள் விலை உயர்த்தப்பட்டுள்ளது. எனவே, மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை காகிதம், மேல் அட்டை மற்றும் அச்சுக்கூலி ஆகியவற்றை கணக்கில் கொண்டு பாடப்புத்தகத்தின் விலை உயர்த்தப்படுவது என்பது வழக்கமான நடைமுறையாகும் .

ஒவ்வொரு ஆண்டும் பாடப்புத்தகங்கள் தயாரிப்பதற்கான உற்பத்தி பொருட்களான காகிதம் மற்றும் மேல் அட்டைகளின் கொள்முதல் விலை கணிசமாக உயர்ந்து வருகிறது. 2018 ஆம் ஆண்டோடு ஒப்பிடும் போது காகிதம் விலை 63 சதவிகிதமும், மேல் அட்டை விலை 33 சதவிகிதமும். மற்றும் அச்சுக்கூலி 21 சதவிகிதமும் உயர்ந்துள்ளது. எனவே அந்த விலையேற்றங்களை ஈடுகட்டும் வகையிலேயே பள்ளி பாடநூல்களின் விலை 6 ஆண்டுகளுக்கு பின்னர் தற்போது தான் உயர்த்தப்பட்டுள்ளது.

இந்த விலை உயர்வு லாப நோக்கத்திற்காக உயர்த்தப்படவில்லை. பாடப்புத்தகத்தின் மேல் அட்டை, காகிதம் மற்றும் அச்சுக்கூலி உள்ளிட்டவைகளின் விலை உயர்வின் காரணமாக பாடபுத்தகம் தயாரிப்பதற்கு ஆகும் செலவினை ஈடுகட்டுவதற்காக மட்டுமே மேற்கொள்ளப்படுகிறது. தமிழ்நாட்டிலுள்ள அரசுப்பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் ஏழை, எளிய குடும்பத்தை சார்ந்த மாணவ மாணவியர்களுக்கு விலையில்லாப் பாடநூல்கள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.

மேலும் போட்டித்தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கு உதவிடும் வகையில் சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகம், மதுரை கலைஞர் நூற்றாண்டு நூலகம், மாவட்ட நூலகங்கள் மற்றும் அறிவு சார் மையங்களுக்கு தேவையான அளவு பள்ளி பாடநூல்கள் வழங்கப்பட்டுள்ளது. என தெரிவித்துள்ளார்.


Next Story