கும்பலை ஏவி பள்ளி மாணவனை கடத்திய இளம்பெண் எங்கே? - போலீசார் தேடுதல் வேட்டை


கும்பலை ஏவி பள்ளி மாணவனை கடத்திய இளம்பெண் எங்கே? - போலீசார் தேடுதல் வேட்டை
x

கடத்தப்பட்ட பள்ளி மாணவனையும், ஆட்டோ டிரைவரையும் போலீசார் 3 மணி நேரத்தில் மீட்டனர்.

மதுரை,

மதுரை எஸ்.எஸ்.காலனி பகுதியை சேர்ந்தவர் ராஜ்குமார். இவருடைய மனைவி மைதிலி ராஜலட்சுமி (வயது 40). இவர்களுடைய மகன், மதுரையில் உள்ள தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறான். தினமும், பள்ளிக்கு ஆட்டோவில் சென்று வருவது வழக்கம். கடந்த 11-ந்தேதி பள்ளிக்கு சென்ற அந்த மாணவன் மற்றும் ஆட்டோ டிரைவர் பால்பாண்டி ஆகியோரை பயங்கர ஆயுதங்களை காண்பித்து ஒரு கும்பல் ஆட்டோவுடன் கடத்தி சென்றது.

பின்னர் அந்த கும்பலை சேர்ந்தவர்கள், மைதிலி ராஜலட்சுமிக்கு போன் செய்து மாணவனை உயிருடன் ஒப்படைக்க வேண்டும் என்றால் ரூ.2 கோடி தர வேண்டும் என மிரட்டியுள்ளனர். இதுதொடர்பாக மைதிலி ராஜலட்சுமி அளித்த புகாரின் பேரில், எஸ்.எஸ்.காலனி போலீசார், அதிரடி நடவடிக்கை எடுத்து 3 மணி நேரத்தில் மாணவனையும், ஆட்டோ டிரைவரையும் மீட்டனர்.

முதற்கட்ட விசாரணையில், இந்த ஆள் கடத்தலில் ஈடுபட்டது முன்னாள் போலீஸ்காரர் செந்தில்குமார் (வயது 45) என்று தெரியவந்தது. தேனி மாவட்டம் போடியில் தலைமறைவாக இருந்த அவரை, தனிப்படை போலீசார் கைது செய்தனர். அவர் அளித்த தகவலின் அடிப்படையில் இந்த கடத்தலில் கூட்டாளிகளாக செயல்பட்ட தென்காசியை சேர்ந்த வீரமணி (30, காளிராஜ் (36), நெல்லையை சேர்ந்த அப்துல் காதர் (38) ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

இ்ந்த சம்பவத்தை மேலும் தீவிரமாக விசாரித்தபோது போலீசாருக்கு இன்னும் அதிர்ச்சி தகவல் தெரியவந்தது. இதில் மூளையாக, தூத்துக்குடியை சேர்ந்த சூர்யா (35) என்ற பெண்ணும், மதுரையை சேர்ந்த மகாராஜா (40) என்பவரும் பின்னணியில் இருந்து, கடத்தல் கும்பலை ஏவியதும் கண்டுபிடிக்கப்பட்டது. அவர்கள் 2 பேரையும் பிடிக்க பல்வேறு இடங்களுக்கு 4 தனிப்படைகள் விரைந்துள்ளன.

இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:-

மாணவன் கடத்தல் சம்பவத்தில் தேடப்படும் சூர்யா, தனது கணவரை பிரிந்து மதுரையில் வசித்து வந்தார். தனது பெற்றோருக்கு எதிராகவும் அவர், போலீசில் புகார் அளித்துள்ளார். பியூட்டி பார்லர் தொடங்கி நடத்தி வந்தார். கடத்தப்பட்ட சிறுவனின் தாயார் மைதிலி ராஜலட்சுமியும் பியூட்டி பார்லர் நடத்தியதால் அவர்கள் இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. அதன்பின்னர் அவர்களுக்கிடையே பணம் கொடுக்கல்-வாங்கல் நடைபெற்று உள்ளது.

பின்னர் சூர்யாவுக்கு சொந்தமான இடத்தை எழுதி வாங்கியதால், அவர்களுக்கிடையே பிரச்சினையும் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து அவரிடம் இருந்து, பணம் மற்றும் இடத்தை திரும்ப பறிக்கும் நோக்கில், மைதிலி ராஜலட்சுமியின் மகனை கடத்தி ரூ.2 கோடி கேட்டுள்ளார். இதற்கு கூட்டாளிகளாக, மதுரையை சேர்ந்த மகாராஜா, முன்னாள் போலீஸ்காரர் செந்தில்குமார் உள்ளிட்ட சிலரை சேர்த்துக்கொண்டார். திட்டமிட்டு பள்ளிக்கு சென்ற சிறுவனை கடத்தி பணம் கேட்டுமிரட்டினர். மகாராஜா, இளம்பெண் சூர்யாவை பிடிக்க தேடுதல் வேட்டையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். விரைவில் இருவரையும் கைது செய்வோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story