சமூகநீதியின் அடையாளம் வி.பி.சிங்: டாக்டர் ராமதாஸ் புகழாரம்


சமூகநீதியின் அடையாளம் வி.பி.சிங்: டாக்டர் ராமதாஸ் புகழாரம்
x

உண்மையான சமூகநீதியின் அடையாளம் வி.பி.சிங்தான் என்று டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

சென்னை,

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

இந்தியாவின் சமூகநீதி வரலாற்றில் புரட்சி அத்தியாயத்தை எழுதியவரும், எனது நண்பருமான வி.பி.சிங்கின் 94-ம் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. ஆயிரம் எதிர்ப்புகள் வந்தாலும், ஆட்சியே போனாலும் பரவாயில்லை அறிவித்தவாறு மத்திய அரசு வேலைவாய்ப்புகளில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 27% இட ஒதுக்கீட்டை செயல்படுத்திக் காட்டியவர் வி.பி.சிங். அவர்தான் உண்மையான சமூகநீதியின் அடையாளம். அதுதான் அனைவராலும் பின்பற்றப்பட வேண்டிய அணுகுமுறை.

ஆனால், உச்சநீதிமன்றமே ஆணையிட்டாலும் கூட சமூகப்படிநிலையின் அடித்தளத்தில் கிடக்கும் மக்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க மறுப்பவர்களின் கைகளில் தான் இன்றைக்கு ஆட்சி, அதிகாரம் சிக்கிக் கொண்டிருக்கிறது. அவர்களுக்கு சமூகநீதி என்பது உதட்டளவிலான உச்சரிப்பு தானே தவிர, உள்ளத்தளவிலான உணர்வு அல்ல. அத்தகையவர்களுக்கு உண்மையான சமூகநீதி என்ன? என்பதை வி.பி.சிங்கின் பிறந்தநாள், வரலாறு கற்றுத்தரட்டும்.

ஆட்சியாளர்கள் ஏற்படுத்தும் தடைகளை முறியடித்து மத்தியிலும், மாநிலத்திலும் 100% சாதிவாரி இடப்பங்கீடு என்ற சமூகநீதி இலக்கை அடைவதுதான் நமது லட்சியமாக இருக்க வேண்டும். அந்த இலக்கை நோக்கி பயணிக்கவும், போராடவும் வி.பி.சிங் பிறந்தநாளில் நாம் அனைவரும் மீண்டும் உறுதியேற்போம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story