வடுவூர் கோதண்டராமர் கோவில் தேரோட்டம்


தினத்தந்தி 7 April 2023 6:45 PM GMT (Updated: 7 April 2023 6:45 PM GMT)

ராமநவமி விழாவையொட்டி வடுவூர் கோதண்டராமர் கோவில் தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

திருவாரூர்

வடுவூர்:

ராமநவமி விழாவையொட்டி வடுவூர் கோதண்டராமர் கோவில் தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

ராமநவமி விழா

தமிழகத்தில் உள்ள புகழ்பெற்ற வைணவ கோவில்களில் ஒன்றாகவும், ராமர் கோவில்களில் சிறப்பு பெற்றதுமாக உள்ளது வடுவூர் கோதண்டராமர் கோவில்.

தஞ்சை மாவட்ட எல்லையாகவும், திருவாரூர் மாவட்டத்தின் தொடக்கமான வடுவூரில் இந்த கோவில் அமைந்துள்ளது. பல்வேறு சிறப்பு பெற்ற வடுவூர் கோதண்டராமர் கோவிலில் ஆண்டு தோறும் ராமநவமி விழா கொண்டாடப்படுவது வழக்கம்.

தேரோட்டம்

அதன்படி இந்த ஆண்டு விழா கடந்த 30-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாநாட்களில் தினமும் ஒவ்வொரு வாகனங்களில் கோதண்டராமர் எழுந்தருளினார்.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று மாலை நடந்தது. முன்னதாக வில் ஏந்திய திருக்கோலத்தில் கோதண்டராமர், சீதாதேவி, லட்சுமணர் சமேதராக சிறப்பு அலங்காரத்தில் தேரில் எழுந்தருளினார்.தேரடி ஆஞ்சநேயருக்கு வெள்ளி கவசம் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

திரளான பக்தர்கள் வடம் பிடித்தனர்

தேரில் எழுந்தருளிய சாமிகளுக்கு சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதை தொடர்ந்து தேர் வடம் பிடிக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

தேர் முக்கிய வீதிகள் வழியாக சென்று இரவு நிலைக்கு வந்து சேர்ந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்


Next Story