மும்மொழி கொள்கை விவகாரம்: தமிழ்நாட்டைப் பொறுத்தவரை தேன் கூட்டில் கை வைப்பது மாதிரி - அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேட்டி


மும்மொழி கொள்கை விவகாரம்: தமிழ்நாட்டைப் பொறுத்தவரை தேன் கூட்டில் கை வைப்பது மாதிரி - அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேட்டி
x

புதிய கல்விக் கொள்கையின் கீழ் வந்தால் மட்டுமே நிதி கிடைக்கும் என மத்திய அரசு தெரிவிப்பதாக தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

திருச்சி,

அன்பில் பொய்யாமொழியின் 25ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு திருச்சி தெற்கு மாவட்ட திமுக அலுவலகத்தில், திருவுருவப்படத்திற்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் திமுக நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதனைத் தொடர்ந்து அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:

மத்திய அரசிடம் இருந்து பள்ளிக் கல்வித் துறைக்கு மட்டும் கடந்த ஜூன் மாதம் வரை வரவேண்டிய ரூ.573 கோடி ரூபாய் தற்போது வரை வராமல் உள்ளது. இது தொடர்பாக திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகளை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் மத்திய கல்வித்துறை மந்திரியை சந்தித்து வலியுறுத்தி இருக்கிறார்கள்.

நேற்று வெளிநாடு செல்வதற்கு முன்பாககூட மத்திய அரசை முதல்-அமைச்சர் வலியுறுத்தி விட்டுச் சென்றுள்ளார்.ரூ. 573 கோடி மட்டுமல்லாமல், கடந்த ஆண்டு வரவேண்டிய ரூ. 249 கோடியும் மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளது. தேசிய கல்விக் கொள்கையின் கீழ் வந்தால் மட்டுமே இந்த நிதி உடனே கிடைக்கும் என அவர்கள் தெரிவிக்கிறார்கள் எனத் தெரிவித்தார்.

மேலும், புதிய கல்வி கொள்கையில் இணைய மத்திய அரசு அழுத்தம் தருகிறதா என்ற செய்தியாளரின் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், நிச்சயம், உண்மைதான் என்று பதிலளித்தார்.

தொடர்ந்து பேசிய அமைச்சர், பள்ளிக்கல்வித் துறையில் தமிழக அரசு சிறப்பான முறையில் செயல்பட்டு வருகிறது என்ற முறையில் மத்திய அரசு அதனை ஊக்கப்படுத்த வேண்டும் என்பதையே மறந்து விடுகிறார்கள். கொள்கை என்பது விவாதம் சார்ந்தது, அதற்காக நிதியை நிறுத்துவது நியாயம் அல்ல.

ஜிஎஸ்டியில் இருந்து அனைத்து தொகையும் மத்திய அரசு எடுத்துக்கொள்கிறது, கடந்த மூன்று ஆண்டு காலமாக கடுமையான நிதி சுமையில் தமிழக அரசு சமாளித்துக் கொண்டிருக்கிறோம். அதேபோன்றுதான் கல்விக்கான நிதி சுமையும் சமாளிக்க போகிறோம். மும்மொழி கொள்கையை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று வரும் போது, தமிழ்நாட்டைப் பொறுத்தவரை தேன் கூட்டில் கை வைப்பது மாதிரி தான்.

2030க்குள் ஜிஇஆர்-ஐ 50% தாண்ட வேண்டும் என மத்திய அரசு இலக்கு வைத்துள்ளது. ஆனால் தமிழ்நாடு 2 வருடங்களுக்கு முன்பே இதை தாண்டி விட்டது.

தமிழ்நாடு படிப்படியாக கல்வி சார்ந்து முன்னேறி வரும் போது ஊக்குவிக்க வேண்டும், தமிழ்நாடு சிறப்பாக செயல்படுகிறது என கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும், தமிழ்நாட்டு மாடலை மற்ற மாநிலங்களுக்கு எடுத்துக்கொள்கிறோம் என சொல்வதுதான் ஆரோக்கியம். கல்விக்கான நிதியை மத்திய அரசு எப்போதும் நிறுத்திவிடக் கூடாது. பல லட்சம் மாணவர்களுடைய கல்வி சார்ந்த விஷயம், இதில் அரசியல் செய்யக்கூடாது எனக் கேட்டுக் கொண்டுள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story