வார விடுமுறையையொட்டி கொடிவேரி அணையில் குவிந்த சுற்றுலா பயணிகள்


வார விடுமுறையையொட்டி கொடிவேரி அணையில் குவிந்த சுற்றுலா பயணிகள்
x

வார விடுமுறையை முன்னிட்டு கொடிவேரி அணையில் இன்று சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

ஈரோடு,

ஈரோடு, கோபிசெட்டிப்பாளையம் அருகே உள்ள கொடிவேரி அணை, ஈரோடு மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களில் முக்கியத்துவம் பெற்றதாகும். ஞாயிறு மற்றும் பிற விடுமுறை நாட்களில் ஈரோடு மாவட்டம் மட்டுமின்றி கோவை, திருப்பூர், சேலம் உள்ளிட்ட பிற மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் கொடிவேரிக்கு வருவார்கள்.

அங்கு சுற்றுலா பயணிகள் சுமார் 15 அடி உயரத்தில் இருந்து அருவி போல கொட்டும் தண்ணீரில் குளித்தும், அணை அருகே விற்பனை செய்யப்படும் பொரித்த மீன்களை வாங்கி ருசித்தும் மகிழ்வார்கள். அந்த வகையில் இன்று வார விடுமுறை தினம் என்பதால் கொடிவேரி அணையில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

அங்கு அருவி போல் கொட்டும் தண்ணீரில் குளித்தும், அணையின் மேற்பகுதியில் பரிசல் பயணம் மேற்கொண்டும், அங்குள்ள பூங்காவில் உற்சாகமாக விளையாடியும் சுற்றுலா பயணிகள் பொழுதைக் கழித்தனர். கொடிவேரிக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால், அங்கு போலீசார் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர்.




Next Story