திருப்பத்தூர்: ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்து பெண் உயிரிழப்பு...!


திருப்பத்தூர்: ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்து பெண் உயிரிழப்பு...!
x
தினத்தந்தி 11 Jun 2022 12:03 PM GMT (Updated: 12 Jun 2022 8:32 AM GMT)

திருப்பத்தூரில் ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்து பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

திருப்பத்தூர்:

ஆந்திர மாநிலம் இந்துப்பூர் சதாசிவ நகர் பகுதியை சேர்ந்தவர் சசிதர் நாயக். இவர் திருவண்ணாமலை மாவட்டம் போளூர் பகுதியில் உள்ள இந்தியன் வங்கியில் உதவி மேலாளராக பணியாற்றி வருகிறார்.

இவரது மனைவி உமா(வயது33). இவர்கள் இருவருக்கும் திருமணமாகி 4 ஆண்டுகள் ஆகிய நிலையில் போளூர் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில் இன்று மற்றும் நாளை இரு நாட்கள் வங்கி விடுமுறை என்பதால் இவர்கள் இருவரும் தங்களது சொந்த ஊருக்கு செல்ல முடிவு செய்தனர்.

இதற்காக இவர்கள் இருவரும் காட்பாடி ரெயில் நிலையத்தில் இருந்து கர்நாடக மாநிலம் பெங்களூரு வரை செல்லும் திருப்பதி எக்ஸ்பிரஸ் ரெயிலில் முன்பதிவு செய்யப்பட்ட குளிர்சாதன பெட்டியில் பயணம் செய்தனர்.

உமா நேற்று நள்ளிரவு கழிவறை சென்றுள்ளார். அப்போது கதவு அருகே செல்லும் போது திடீரென தவறி விழுந்து உள்ளார்.

இந்த நிலையில் இன்று அதிகாலை ரெயில் பெங்களூரு வந்து அடைந்ததும் கணவர் சசிதர் தனது மனைவியை தேடி உள்ளார். அப்போது மனைவி ரெயிலில் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்த சசிதர் பெங்களூரு ரெயில் நிலையத்தில் உள்ள ரெயில்வே போலீசாரிடம் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் பெங்களூரு போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில் இன்று அதிகாலை பச்சூர்-மள்ளாலனூர் ரெயில் நிலையங்களுக்கு இடையே ஓடும் ரெயிலில் பயணம் செய்த சுமார் 35 வயது பெண் தவறி விழுந்து அடிபட்டு இறந்து கிடப்பதாக ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலின் பேரில் ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசார் சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்று பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இறந்தவர் யார் எந்த ஊரை சேர்ந்தவர் என பல்வேறு கோணங்களில் ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது கர்நாடக மாநில பெங்களூர் ரெயில்வே காவல் நிலையத்தில் ஓடும் ரெயிலில் பயணம் செய்த பெண் காணவில்லை என புகார் கொடுத்துள்ள தகவல் அறிந்ததும் உடனடியாக இறந்த கிடந்த பெண்ணின் படத்தை பெங்களூரு ரெயில்வே போலீசாருக்கு அனுப்பி வைத்தனர்.

இதன் மூலம் திருப்பதி எக்ஸ்பிரஸ் ரெயிலில் இருந்த தவறி விழுந்தது சசிதரின் மனைவி உமா என்பது போலீசாருக்கு தெரியவந்தது. இதனை தொடர்ந்து அவரது கணவருக்கு தகவல் தெரிவித்து ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story