மோகனூர் வள்ளியம்மன், நம்பியண்ணன் கோவிலில்பொங்கல் விழா திரளான பக்தர்கள் சாமி தரிசனம்


மோகனூர் வள்ளியம்மன், நம்பியண்ணன் கோவிலில்பொங்கல் விழா திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
x
தினத்தந்தி 3 March 2023 7:00 PM GMT (Updated: 3 March 2023 7:00 PM GMT)
நாமக்கல்

மோகனூர்:

மோகனூரில் கொங்கு குலாலர் கிழங்கு நாடு 3 அண்ணன்மார்களுக்கு பாத்தியப்பட்ட வள்ளியம்மன், நம்பியண்ணன் கோவில் உள்ளது. பிரசித்தி பெற்ற இந்த கோவிலில் 16 ஆண்டுகளுக்கு பின்னர் பொங்கல் விழா நேற்று முன்தினம், நேற்று என 2 நாட்கள் நடந்தது. முதல் நாள் காலை 9 மணிக்கு அண்ணன்மார்கள் மோகனூர் வள்ளியம்மன் கோவில் வந்தடைந்தனர். மதியம் 2 மணிக்கு கரூர் மாவட்டம் புகளூர் கண்டியம்மன், புளியமரத்து கருப்பண்ண சாமி கோவிலில் இருந்து பேழைக்கூடை, வேல் மற்றும் குதிரை பிடித்து கோவில் வந்தது. பின்னர் மாலை 4 மணிக்கு நாடுர் மாமன்மார்கள் அழைப்பும், 6 மணிக்கு சக்தி அழைத்தல், இரவு 7.30 மணிக்கு பொங்கல் விழா மலர் வெளியீடும், இரவு 8 மணிக்கு வாணவேடிக்கை, கலைநிகழ்ச்சி நடந்தது.

விழாவில் நேற்று அதிகாலை 4 மணிக்கு குண்டம் இறங்குதல், பொங்கல் வைத்தல், கிடா வெட்டுதல் நிகழ்ச்சியும், மதியம் 12 மணிக்கு மகா பூஜை, 2 மணிக்கு ஊஞ்சல் பாட்டு, பிற்பகல் 3 மணிக்கு பிறந்தகத்து பிள்ளைகளுக்கு பிரசாதம் வழங்குதல், மாலை 4.30 மணிக்கு பூசாரி வரிசை, கும்பிடு கொடுத்தல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தது.

இதில் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை மற்றும் முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, எம்.ஆர்.விஜயபாஸ்கர், பரமத்திவேலூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சேகர் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை வள்ளியம்மன் அறக்கட்டளை அறங்காவலர்கள் செய்திருந்தனர்.


Next Story