தமிழக வெற்றிக் கழக முதல் மாநாடு: நாளை பூமி பூஜை - புஸ்ஸி ஆனந்த் நேரில் ஆய்வு


தமிழக வெற்றிக் கழக முதல் மாநாடு: நாளை பூமி பூஜை - புஸ்ஸி ஆனந்த் நேரில் ஆய்வு
x

தமிழக வெற்றிக் கழக மாநாடு நடைபெற உள்ள இடத்தை மாநில செயலாளர் புஸ்ஸி ஆனந்த் நேரில் ஆய்வு செய்தார்.

சென்னை,

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு 27-ந்தேதி விக்கிரவாண்டியில் நடக்கிறது. இதையொட்டி மாநாட்டில் பங்கேற்க இருக்கும் தொண்டர்களுக்கு உரிய அறிவுறுத்தல்களை கட்சி தலைமை வழங்கி வருகிறது. எந்த சூழ்நிலையிலும் கட்சிக்கு அவப்பெயர் ஏற்படாத வகையில் செயல்பட வேண்டும் என்று நிர்வாகிகள், தொண்டர்களுக்கு விஜய் ஏற்கனவே வலியுறுத்தியுள்ளார். மாநாட்டுக்கு ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் குறைந்தபட்சம் 10 ஆயிரம் பேரையாவது அழைத்து வர வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

இதற்காக மாவட்டம், வட்ட வாரியாக குழு அமைக்கப்பட்டு உள்ளது. இந்த குழுவினர் மாநாட்டுக்கு தொண்டர்களை பாதுகாப்பாக அழைத்து வந்து, மீண்டும் பாதுகாப்பாக அனுப்பி வைக்க கட்சி தலைமை அறிவுறுத்தி உள்ளது. ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் வரும் வாகனங்களின் எண்ணிக்கை மற்றும் பதிவெண் விவரங்கள் கட்சி தலைமை சேகரித்து வருகிறது.

இந்த சூழலில், மாநாட்டுக்கு இன்னும் குறைந்த நாட்களே இருப்பதால் பணிகளை விரைவுபடுத்த தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் உத்தரவிட்டிருந்தார். இதனிடையே இம்மாநாடு நடைபெற விதிக்கப்பட்ட 33 நிபந்தனைகளில் 17 நிபந்தனைகளை மாநாட்டில் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று கூறி காவல்துறை அனுமதி அளித்திருந்தது.

இந்தநிலையில் மாநாட்டு பந்தல் கால் நடும் விழா நாளை நடைபெற இருக்கிறது. இதன்படி நாளை காலை 4 மணி முதல் 6 மணிக்குள் பந்தல் கால் நடப்படுகிறது. இதில் விஜய் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகி இருந்தநிலையில் அவர் காணொலி மூலம் மட்டுமே பங்கேற்க வாய்ப்புள்ளதாக தமிழக வெற்றிக் கழக தலைமை தெரிவித்திருந்தது.

இந்த சூழலில் மாநாடு நடைபெற உள்ள இடத்தை மாநில செயலாளர் புஸ்ஸி ஆனந்த் நேரில் ஆய்வு செய்தார். புஸ்ஸி ஆனந்த் தலைமையில் கட்சியினர் மாநாட்டு திடலில் பூமி பூஜையை செய்து மாநாட்டுக்கான ஆயத்த பணியை தொடங்கினர். நாளை பூமி பூஜை நடைபெறவுள்ள நிலையில், தமிழ்நாட்டின் பழமையான ஆலயங்களில் இருந்து புனித நீர் எடுத்துச் செல்லப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


Next Story