ஈரோடு அருகே எலி காய்ச்சலுக்கு பள்ளி மாணவன் பலி


ஈரோடு அருகே எலி காய்ச்சலுக்கு பள்ளி மாணவன் பலி
x

கோப்புப்படம் 

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே எலி காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு பள்ளி மாணவன் உயிரிழந்தான்.

ஈரோடு,

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள பருவாச்சி காட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் பெரியசாமி. இவருடைய மகன் தினேஷ்குமார் (வயது 13). பருவாச்சி அருகே உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தான். கடந்த 16-ந்தேதி பள்ளி வகுப்பறையில் படித்துக்கொண்டிருந்தபோது தினேஷ்குமார் திடீரென மயங்கி விழுந்தான்.

இதுகுறித்து தகவல் அறிந்த மாணவனின் பெற்றோர் விரைந்து வந்து தினேஷ்குமாரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு மருத்துவர்கள் சிறுவனை பரிசோதனை செய்தபோது தினேஷ்குமாருக்கு எலி காய்ச்சல் பாதிப்பு இருப்பது தெரிந்தது.

இதைத்தொடர்ந்து மருத்துவர்கள் சிறுவனுக்கு தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி மாணவன் தினேஷ்குமார் நேற்று பரிதாபமாக உயிரிழந்தான்.


Next Story