கறந்த பால் மடி புகாது, கருவாடு மீன் ஆகாது... அ.தி.மு.க.வில் சசிகலாவுக்கு மீண்டும் இடம் கிடையாது - ஆர்.பி. உதயகுமார்


கறந்த பால் மடி புகாது, கருவாடு மீன் ஆகாது... அ.தி.மு.க.வில் சசிகலாவுக்கு மீண்டும் இடம் கிடையாது - ஆர்.பி. உதயகுமார்
x

ஜெயலலிதாவின் பின்புலத்தைக் காட்டி சசிகலா தன்னை வளர்த்துக் கொண்டாரே தவிர மக்களுக்காக எதுவும் செய்ததில்லை என்று ஆர்.பி. உதயகுமார் கூறியுள்ளார்.

மதுரை,

மதுரையில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கறந்த பால் மடி புகாது, கருவாடு மீன் ஆகாது. அ.தி.மு.க.வில் சசிகலாவுக்கு மீண்டும் இடம் கிடையாது. அ.தி.மு.க. தொண்டர்கள் கவனமாக, விழிப்புணர்வோடு, எச்சரிக்கையோடு இருக்க வேண்டிய நேரமிது. சசிகலா இருந்தால்தான் அ.தி.மு.க. வெற்றி பெறும் என்பது கற்பனை கதை. சாதியப் பின்புலத்தை பயன்படுத்தி சசிகலா தன்னை வளர்த்துக் கொண்டார். அவர் சார்ந்த சமுதாயத்திற்கு சசிகலா என்ன செய்தார் என்பதை சொல்ல தயாரா?

ஆடி மாதத்தில் சுற்றுப் பயணம் என்ற பெயரில் 'சுற்றுலா பயணம்' சென்றுள்ளார் சசிகலா. ஜெயலலிதாவின் பின்புலத்தைக் காட்டி தன்னை வளர்த்துக் கொண்டாரே தவிர மக்களுக்காக எதுவும் செய்ததில்லை. இதை எந்த மேடையிலும் விவாதிக்கத் தயார். உள்ளடி வேலைகளின் காரணமாக அ.தி.மு.க. ஆட்சியை இழந்தது. மீண்டும் அ.தி.மு.க. ஆட்சி மலர வேண்டும் என்றால் ஜானகி போல் சசிகலா ஒதுங்கிக் கொண்டு வாழ்த்து தெரிவிக்க வேண்டும்.

அ.தி.மு.க.வினர் தற்போது சுதந்திர காற்றை சுவாசிக்கின்றனர். அ.தி.மு.க.வில் சசிகலாவுக்கு மீண்டும் இடம் கிடையாது. இவ்வாறு அவர் கூறினார்.



Next Story