சேலம்: சாலையோரம் மதுபோதையில் மயங்கி கிடந்த பிளஸ்-1 மாணவி


சேலம்: சாலையோரம் மதுபோதையில் மயங்கி கிடந்த பிளஸ்-1 மாணவி
x

மாணவியை 2 பேர் மோட்டார் சைக்கிளில் அழைத்து வந்து அழகாபுரம் சாலையில் விட்டு சென்றதாக போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.

சேலம்,

சேலம் அழகாபுரம் பகுதியில் உள்ள சாலையோரத்தில் நேற்று மாலை 16 வயதுடைய மாணவி ஒருவர் மயங்கி கிடந்தார். இதுகுறித்து தகவல் கிடைத்ததும் அந்த மாணவியின் பெற்றோர் அங்கு விரைந்து வந்தனர். பின்னர் அவர்கள் மகளை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர்.

இதனிடையே அந்த மாணவியை சிலர் பாலியல் பலாத்காரம் செய்ததாக தகவல் பரவியது. அதைத்தொடர்ந்து போலீசார் ஆஸ்பத்திரிக்கு விரைந்து சென்று மாணவியிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில், அந்த மாணவி சேலத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்ததும், மது போதையில் அவர் மயங்கி கிடந்ததும் தெரியவந்தது.

இதுகுறித்து போலீசார் கூறும்போது, மது போதையில் இருந்த பிளஸ்-1 மாணவியை 2 பேர் மோட்டார் சைக்கிளில் அழைத்து வந்து அழகாபுரம் பகுதியில் விட்டுவிட்டு சென்றுள்ளனர். அவர்கள் யார்? என்பது குறித்து எந்த தகவலும் தெரியவில்லை.

மேலும் அந்த மாணவி நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்தினாரா? அல்லது யாராவது அவருக்கு குளிர்பானத்தில் மதுவை கலந்து கொடுத்தார்களா? என பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகிறோம். டாக்டர்கள் பரிசோதனையில் அந்த மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்படவில்லை என்பது தெரியவந்துள்ளது என்றனர்.


Next Story