அ.தி.மு.க. ஒன்றிணைய வேண்டி எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சமாதியில் பிரார்த்தனை - முன்னாள் அமைச்சர் அறிவிப்பால் பரபரப்பு


எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சமாதியில் பிரார்த்தனை
x

அ.தி.மு.க. பணக்காரர்களால் உருவான கட்சி அல்ல என்று முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன் கூறினார்.

திருச்சி,

அ.தி.மு.க. ஒன்றிணைய வேண்டி எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சமாதியில் 10-ந்தேதி மண்டியிட்டு பிரார்த்தனை செய்யப்போவதாக முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன் கூறினார்.

அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன் திருச்சியில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

1975-ம் ஆண்டு அ.தி.மு.க.வில் உட்கட்சி பிரச்சினை ஏற்பட்டபோது, ''சிக்கல் தீர்ப்பு குழு'' என்ற ஒரு அமைப்பை ஏற்படுத்தி எம்.ஜி.ஆர். தீர்வு கண்டார். இப்போது அதேபோன்று ஒரு குழுவை ஏற்படுத்தி உரிய தீர்வு காண வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

எங்கள் கட்சியின் கொள்கையை எம்.ஜி.ஆர். வகுத்தார். கட்சியின் கட்டுப்பாடுகளை ஜெயலலிதா வகுத்தார். அதன்படிதான் செயல்பட வேண்டும். பா.ஜனதாவுடன் கூட்டணி வைத்த ஜெயலலிதாவே, இனி அவர்களுடன் கூட்டணி இல்லை என்பதை தெளிவாக சொல்லிவிட்டு சென்றுள்ளார்.

கட்சியை வளர்த்தவர்களுக்குத்தான் தோல்வியின் வலி தெரியும். எனக்கு வலிக்கிறது. அ.தி.மு.க. பணக்காரர்களால் உருவான கட்சி அல்ல. ஏழை எளியவர்களால் எழுச்சி பெற்ற இயக்கம். கட்சியை ஒன்றுபடுத்தும் சக்தி படைத்தவர்கள் யாராக இருந்தாலும், அவர்களை தலைவராக ஏற்றுக்கொள்ள தயார்.

சசிகலா 2 ஆண்டுகளாக அறிக்கை விட்டுக்கொண்டிருப்பதை தவிர இணைப்பு முயற்சிக்கு வேறு என்ன நடவடிக்கை எடுத்தார்? அதுபோல் டி.டி.வி.தினகரன் தனிக்கட்சி தொடங்கி சென்றுவிட்டார். அவர் எப்படி அ.தி.மு.க.வை ஒன்றிணைப்பது குறித்து பேச முடியும்.

ஓ.பன்னீர்செல்வம் ஆரம்பித்தது, அ.தி.மு.க. தொண்டர்கள் உரிமை மீட்பு குழு. ஆனால் அ.தி.மு.க.வை எதிர்த்து தேர்தலில் போட்டியிட்டார். போட்டியிட வேண்டாம் என்று நாங்கள் அவரிடம் கூறியும் கேட்கவில்லை.

போட்டியிட்டால் 40 தொகுதிகளிலும் போட்டியிட வேண்டும் என்று கூறினோம். அதையும் கேட்கவில்லை. தொண்டர்கள் உரிமையை மீட்பதையும் நழுவ விட்டுவிட்டார். நான் எப்போது சென்றாலும் எடப்பாடி பழனிசாமி சேர்த்துக்கொள்வார்.

வருகிற 10-ந்தேதி சென்னை மெரினா கடற்கரையில் உள்ள எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சமாதியில் மண்டியிட்டு, ''நீங்கள் உருவாக்கிய இந்த இயக்கம் இந்த தேர்தலில் தடம் புரண்டு விட்டது. மீண்டும் அ.தி.மு.க. ஒன்றுபட்டு ஒரே சக்தியாக திரண்டு வெற்றி பெற எங்களுக்கு அந்த வல்லமையை தர வேண்டும்" என்று பிரார்த்தனை செய்ய உள்ளேன்.

இவ்வாறு கு.ப.கிருஷ்ணன் கூறினார்.

அப்போது, அ.தி.மு.க. தொண்டர்கள் உரிமை மீட்பு குழுவில் இருந்து வேறு யாராவது உங்களுடன் வருவார்களா? என்று கேட்டதற்கு, இது என்னுடைய விருப்பம். நான் மட்டும்தான் செல்ல இருக்கிறேன் என்றார். அவர் இவ்வாறு கூறியிருப்பது அதிமுகவில் தொண்டர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story