'பிரதமர் நரேந்திர மோடி தமிழுக்கு பெரும் தொண்டாற்றி வருகிறார்' - எல்.முருகன்


பிரதமர் நரேந்திர மோடி தமிழுக்கு பெரும் தொண்டாற்றி வருகிறார் - எல்.முருகன்
x
தினத்தந்தி 30 March 2024 8:33 AM (Updated: 30 March 2024 10:53 AM)
t-max-icont-min-icon

இதுவரை எந்தவொரு மத்திய அரசும் செய்யாத அளவிற்கு, தமிழுக்கு பிரதமர் மோடி பெரும் தொண்டாற்றி வருவதாக எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

சென்னை,

தமிழின் தொன்மைக்கால இலக்கியங்கள் ஒவ்வொன்றையும் உலக அரங்கில் பிரதமர் மோடி முன்மொழிந்து வருகிறார் என நீலகிரி தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;-

"பாரத பிரதமர் நரேந்திரமோடி அவர்கள் இந்தியை பரப்புவதாக ஒரு தவறான செய்தியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மீண்டும் பரப்பி வருகிறார்.

பாரத பிரதமர் நரேந்திர மோடி தமிழில் பேச ஆரம்பித்தால், உங்களைப் போன்ற 'போலி திராவிட மாடல்' ஆட்சியாளர்களுக்கு, மீண்டும் மீண்டும் ஆட்சியமைப்பதற்கான வாய்ப்பே கிடைக்காது என்பதுதான் உண்மை. இந்த உண்மையை, இன்று தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு சாமானிய மக்களும் உணர்ந்துள்ளார்கள். அதன் விளைவே உங்களின் இந்த அறிக்கை என்பதையும் உணர்கிறேன்.

இதுவரை எந்தவொரு மத்திய அரசும் செய்யாத அளவிற்கு, தமிழுக்கு அரும் பெரும் தொண்டாற்றி வருகிறார் பாரத பிரதமர் நரேந்திர மோடி. மத்திய அரசு கடந்த 10 ஆண்டுகளில் தமிழுக்கு செய்த தொண்டுகளை பட்டியலிடுகிறேன்..!

கடந்த காலங்களில், பல்வேறு நாடுகளுக்கும், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களுக்கும் சுற்றுப்பயணம் சென்று வரும் நமது பிரதமர், திருக்குறள் உள்ளிட்ட தமிழின் தொன்மைக்கால இலக்கியங்கள் ஒவ்வொன்றையும் உலக அரங்கில் முன்மொழிந்து வருகிறார் என்பதை முதல்-அமைச்சர் பார்ப்பதில்லையா..?

கடந்தாண்டு பொதுத்தேர்வு எழுதுகிற மாணவர்களிடம் கலந்துரையாடும் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், நமது தேசத்தின் மிகவும் தொன்மையான மொழி தமிழ்தான் என்பதை சுட்டிக் காட்டியுள்ளார். மேலும், கடந்த இரண்டு ஆண்டுகளாக காசிக்கும், தமிழ்நாட்டிற்கும் உள்ள தொடர்பை எடுத்துக்காட்டும் வண்ணம், 'காசித் தமிழ்ச் சங்கமம்' விமரிசையாக நடத்தப்பட்டது என்பதெல்லாம் முதல்-அமைச்சர் ஸ்டாலின் அவர்களுக்கு நினைவில்லையா?

நாடாளுமன்றம் புதிய கட்டிடத்தில் தமிழகத்தின் பெருமையான செங்கோல், சென்னையில் செம்மொழி ஆராய்ச்சி மையத்திற்கான புதிய கட்டிடம் என்று, தமிழ் மொழி முன்னிலைப்படுத்தப்பட்டு வருவதை கவனிப்பதில்லையா?

மத்தியில் 10 ஆண்டுகளாக காங்கிரஸ்- தி.மு.க. கூட்டணி ஆட்சியில் இருந்தபோது சி.ஆர்.பி.எப். போன்ற தேசிய அளவிலான தேர்வுகளை தமிழ் மொழியில் எழுத முடியவில்லை. மத்திய தேர்வுகளை தமிழ் மொழியில் எழுத பாரத பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசுதான் நடவடிக்கை எடுத்துள்ளது.

தமிழ்தான் எல்லாம் என்று இத்தனை ஆண்டு காலமாக பொய் சொல்லியே தமிழ் மக்களை ஏமாற்றி வந்த உங்களால், உங்களின் கட்சிக்காரர்கள் நடத்துகிற தனியார் பள்ளிகளில் தமிழை கட்டாய மொழியாக்க முடிந்ததா..?

கெட்டிக்காரன் புளுகு எட்டு நாள் என்றால், உங்கள் கட்சி தொடங்கிய காலத்திலிருந்து தமிழின் பெயரை சொல்லியே புளுகி வரும் உங்களைப் பற்றி சுயபரிசோதனை செய்து பாருங்கள் முதல்-அமைச்சர் அவர்களே..!"

இவ்வாறு எல்.முருகன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

1 More update

Next Story