ஒப்பிலியப்பன் கோவிலில் குடமுழுக்கு 14 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கிறது


ஒப்பிலியப்பன் கோவிலில் குடமுழுக்கு 14 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கிறது
x
தினத்தந்தி 27 Jun 2023 7:04 PM GMT (Updated: 28 Jun 2023 10:50 AM GMT)

ஒப்பிலியப்பன் கோவிலில் 14 ஆண்டுகளுக்கு பிறகு நாளை (வியாழக்கிழமை) குடமுழுக்கு நடக்கிறது.

தஞ்சாவூர்

திருநாகேஸ்வரம் ஒப்பிலியப்பன் கோவிலில் 14 ஆண்டுகளுக்கு பிறகு நாளை (வியாழக்கிழமை) குடமுழுக்கு நடக்கிறது.

ஒப்பிலியப்பன் கோவில்

கும்பகோணம் அருகே திருநாகேஸ்வரத்தில் ஒப்பிலியப்பன் கோவில் எனும் வெங்கடாசலபதி கோவில் உள்ளது. 108 திவ்ய தேசங்களில் ஒன்றான இக்கோவில் நம்மாழ்வார், திருமங்கையாழ்வார், பொய்கையாழ்வார், பேயாழ்வார் ஆகியோரால் மங்களாசாசனம் பாடப்பட்டதாகும்.

பூலோக வைகுண்டம், திருவிண்ணகர் என இக்கோவிலை அழைக்கிறார்கள். இங்கு 14 ஆண்டுகளுக்கு பிறகு குடமுழுக்கு நடத்த திட்டமிடப்பட்டு கோபுரங்கள், பிரகாரங்களில் ரூ.3½ கோடி மதிப்பில் திருப்பணிகள் நடந்தன.

குடமுழுக்கு

திருப்பணி வேலைகள் அனைத்தும் நிறைவடைந்து விட்டன. நாளை (வியாழக்கிழமை) காலை 9 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் வெங்கடாசலபதி கோவிலுக்கும், வடக்கு வீதியில் உள்ள ஜெய வீர ஆஞ்சநேயர் கோவிலுக்கும் குடமுழுக்கு நடக்கிறது.

முன்னதாக நாளை காலை 5.30 மணிக்கு 8-ம் கால யாகசாலை பூஜை நடக்கிறது. 9 மணிக்கு கடம் புறப்பாடு நடைபெற்று 10 மணிக்குள் விமான கலசங்கள் மற்றும் மூலவர் சன்னதியில் குடமுழுக்கு நடக்கிறது. இரவு 7 மணிக்கு பெருமாள், தாயார் தங்க கருட சேவையும், பெரியாழ்வார், நிகமாந்த, மகாதேசிகன் திருவீதி புறப்பாடு நடக்கிறது.

அன்னதானம்

குடமுழுக்கு விழாவை முன்னிட்டு 28 வேதிகைகள் 34 ஹோம குண்டங்கள் என பிரம்மாண்டமாக யாக சாலை அமைக்கப்பட்டுள்ளது. இங்கு 150 வேத விற்பன்னர்கள் வேதங்களை படித்து பூஜைகளை செய்து வருகின்றனர். நேற்று 4, 5-வது கால யாக சாலை பூஜை நடந்தது.

இன்று (புதன்கிழமை) காலை 8 மணிக்கு 6-ம் கால யாகசாலை பூஜைகள் தொடங்கி நடக்கிறது. மாலை 5 மணிக்கு 7-ம் கால யாகசாலை பூஜைகள் தொடங்குகிறது. குடமுழுக்கு விழாவை முன்னிட்டு கோவில் நிர்வாகம் சார்பில் பூமி தேவி திருமண மண்டபத்தில் தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. விழா ஏற்பாடுகளை கோவில் உதவி ஆணையர் (கூடுதல் பொறுப்பு) சாந்தா, கண்காணிப்பாளர் சக்திவேல் மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.


Next Story