பயன்பாடின்றி கிடக்கும் நெல்லிக்குப்பம் பஸ் நிலையத்தில் அதிகாரிகள் ஆய்வு
![பயன்பாடின்றி கிடக்கும் நெல்லிக்குப்பம் பஸ் நிலையத்தில் அதிகாரிகள் ஆய்வு பயன்பாடின்றி கிடக்கும் நெல்லிக்குப்பம் பஸ் நிலையத்தில் அதிகாரிகள் ஆய்வு](https://media.dailythanthi.com/h-upload/2022/12/01/1013159-cdl-02.webp)
பயன்பாடின்றி கிடக்கும் நெல்லிக்குப்பம் பஸ் நிலையத்தில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
நெல்லிக்குப்பம்,
நெல்லிக்குப்பத்தில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.1 கோடி செலவில் கடைகளுடன் புதிதாக பஸ் நிலையம் கட்டப்பட்டு பயன்பாடின்றி கிடக்கிறது. இதை செங்கல்பட்டு மண்டல நகராட்சி நிர்வாக இயக்குனர் சசிகலா தலைமையில் நகராட்சி நிர்வாக மண்டல பொறியாளர் கருப்பையா ராஜா உள்ளிட்ட அதிகாரிகள் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது அவர்கள், நகராட்சி அதிகாரிகளிடம் பஸ் நிலையத்திற்குள் பஸ்கள் ஏன் வந்து செல்வதில்லை? எனவும், பெரும்பாலான கடைகள் ஏன் மூடப்பட்டுள்ளன? எனவும் கேட்டனர்.
அதற்கு நகர மன்ற தலைவர் ஜெயந்தி ராதாகிருஷ்ணன், கமிஷனர் பார்த்தசாரதி ஆகியோர் கூறுகையில், பஸ் நிலையத்திற்குள் அனைத்து பஸ்களும் வந்து செல்ல மாவட்ட நிர்வாகத்துடனும், போக்குவரத்து அதிகாரிகளுடனும் இணைந்து பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றோம். குறிப்பாக வெளியூர்களில் இருந்து வரும் பஸ்கள் இடப்பற்றாக்குறை காரணமாக பஸ் நிலையத்துக்குள் சென்று வர சிரமம் ஏற்பட்டுள்ளது. ஆகவே கூடுதலாக இடம் தேவைப்படுவதால் பஸ்நிலையத்தையொட்டியுள்ள இட உரிமையாளரிடம் இருபுறமும் 15 அடி இடம் கேட்டுள்ளோம். இது சம்பந்தமாக தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகின்றது. விரைவில் பஸ் நிலையத்திற்குள் பஸ்கள் மற்றும் கடைகள் வழக்கம் போல் இயக்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தனர். இதனை கேட்ட மண்டல இயக்குனர் சசிகலா, நெல்லிக்குப்பம் பஸ் நிலையம் இயங்குவதற்கு உடனடியாக அனைத்து நடவடிக்கைகளும் எடுக்க வேண்டும் என உத்தரவிட்டார். அப்போது நகராட்சி துப்புரவு அலுவலர் சக்திவேல், பொறியாளர் பாண்டு, எழுத்தர் பாபு மற்றும் பலர் உடன் இருந்தனர்.