வாகைகுளம் அருகே பெட்ரோல் குண்டு வீச்சால் பரபரப்பு


வாகைகுளம் அருகே பெட்ரோல் குண்டு வீச்சால் பரபரப்பு
x
தினத்தந்தி 10 July 2023 6:45 PM GMT (Updated: 10 July 2023 6:45 PM GMT)

வாகைகுளம் அருகே பெட்ரோல் குண்டு வீச்சால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தூத்துக்குடி

ஸ்ரீவைகுண்டம்:

வாைககுளம் அருகே மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர்கள் பெட்ரோல் குண்டு வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது.

ெபட்ரோல் குண்டு வீச்சு

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் தாலுகா வாைககுளம் அருகே மீனாட்சிபட்டி கிராமம் உள்ளது. அங்குள்ள பஸ் நிறுத்தம் அருகில் ஒரு தரப்பினர் சாலையோரம் தியாகிகளின் உருவப்படங்களை வைத்திருந்தனர்.

நேற்று முன்தினம் இரவு 4 மோட்டார் சைக்கிள்களில் மர்மநபர்கள் அங்கு வந்தனர். அவர்கள் திடீரென தியாகிகளின் புகைப்படங்கள் மீது பெட்ரோல் குண்டை வீசினர். இதில் அந்த புகைப்படங்கள் எரிந்து சேதம் அடைந்தன. பின்னர் மர்மநபர்கள் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.

பேச்சுவார்த்தை

இதை அறிந்த அப்பகுதியை சேர்ந்த மக்கள் நேற்று காலை மறியல் போராட்டத்தில் ஈடுபடுவதற்காக ஸ்ரீவைகுண்டம்-தூத்துக்குடி சாலையில் திரண்டனர். உடனே ஸ்ரீவைகுண்டம் துணை போலீஸ் சூப்பிரண்டு மாயவன் தலைமையில் இன்ஸ்பெக்டர் அன்னராஜ் மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் உறுதி அளித்ததை தொடர்ந்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

போலீசில் புகார்

இதற்கிடையே, தியாகிகளின் உருவப்படங்கள் மீது பெட்ரோல் குண்டு வீசிய மர்மநபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மீனாட்சிபட்டி ஊர் தலைவர் ராஜகோபால் ஸ்ரீவைகுண்டம் போலீசில் புகார் செய்தார்.

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் அந்த பகுதியில் கோவிலில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து, அதன் அடிப்படையில் மர்மநபர்களை பிடிக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story