முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ரூ.850 கோடி மதிப்புள்ள புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து


முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ரூ.850 கோடி மதிப்புள்ள புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து
x

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ரூ.850 கோடி மதிப்புள்ள புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன.

சென்னை,

தமிழ்நாட்டில் அதிக அளவில் நிறுவனங்களை தொடங்கவும், தொழில் முதலீடுகளை ஈர்க்கவும், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்க நாட்டிற்கு பயணம் மேற்கொண்டுள்ளார். நேற்று சிகாகோவில், டிரில்லியன்ட் நிறுவனத்துடன் ரூ.2 ஆயிரம் கோடி முதலீட்டில், தமிழ்நாட்டில் வளர்ச்சி மற்றும் உலகளாவிய உதவி மையம் மற்றும் உற்பத்தி மையத்தை நிறுவுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

மேலும் நைக் மற்றும் ஆப்டம் நிறுவனங்களின் உயர் அலுவலர்களை முதல்-அமைச்சர் சந்தித்து, தமிழ்நாட்டில் புதிய தொழில் முதலீடுகளை மேற்கொள்ள அழைப்பு விடுத்தார். இந்த நிலையில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இன்று ரூ.850 கோடி மதிப்புள்ள புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன.

அதன்படி, லிங்கன் எலக்ட்ரிக் நிறுவனத்துடன் ரூ.500 கோடி முதலீட்டில் செங்கல்பட்டு மாவட்டத்தில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, உற்பத்தி மையத்தை விரிவாக்கம் செய்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.

விஷய் பிரிஷிஷன் நிறுவனத்துடன் ரூ.100 கோடி முதலீட்டில் காஞ்சிபுரத்தில் சென்சார்ஸ் மற்றும் டிரான்ஸ்டியூசர்ஸ் (Sensors and Transducers) உற்பத்தி மையத்தை நிறுவுவதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. மேலும் விஸ்டியன் நிறுவனத்துடன் ரூ.250 கோடி முதலீட்டில் சென்னை மற்றும் கோவையில் மின்னணு உற்பத்தி மையத்தை நிறுவுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.


Next Story