அனைத்து நலன்களும், வளங்களும் தமிழக மக்களை சென்றடையட்டும் - ஓ.பன்னீர்செல்வம் ஆயுத பூஜை வாழ்த்து


அனைத்து நலன்களும், வளங்களும் தமிழக மக்களை சென்றடையட்டும் - ஓ.பன்னீர்செல்வம் ஆயுத பூஜை வாழ்த்து
x

கோப்புப்படம் 

ஆயுத பூஜை மற்றும் விஜயதசமியை முன்னிட்டு ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சென்னை,

தமிழ்நாடு முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி வாழ்த்துச் செய்தியில் தெரிவித்திருப்பதாவது:-

நவராத்திரி பண்டிகையின் ஒன்பதாவது நாளான ஆயுத பூஜை மற்றும் பத்தாவது நாளான விஜயதசமித் திருநாளை பக்தியுடனும், பரவசத்துடனும் கொண்டாடும் தமிழக மக்கள் அனைவருக்கும் எனது உளம் கனிந்த இனித ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அழியாச் செல்வமாம் கல்விச் செல்வத்தை வழங்கும் கலைமகளையும், மன உறுதியுடன் கூடிய வீரத்தை தரும் மலைமகளையும், செல்வங்களை வாரி வழங்கும் திருமகளையும் போற்றி வழிபடுவது நவராத்திரியின் சிறப்பம்சம் ஆகும்.

உழைப்பின் உயர்வை அறிந்து, அவரவர் தொழிலின் மேன்மையை அறிந்து, அந்தத் தொழிலுக்கு ஆதாரமாக விளங்குகின்ற கருவிகளை இறைவன் திருவடிகளில் படைத்து வழிபடும் நாள் ஆயுத பூஜைத் திருநாள். தொடங்கிடும் நற்காரியங்கள் அனைத்தும் வெற்றி பெறும் என்ற நம்பிக்கையோடு, அன்னை மகா சக்தியை வணங்கி, கல்வி, கலை, தொழில் போன்றவற்றை துவங்கும் நாள் விஜயதசமி திருநாள்.

இப்படிப்பட்ட சிறப்பு வாய்ந்த ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி திருநாளில், அன்னை மகா சக்தியின் அருள் அனைவருக்கும் கிட்டட்டும், வெற்றிகள் குவியட்டும், அனைத்து நலன்களும், வளங்களும் தமிழக மக்களை சென்றடையட்டும், அனைவரும் மகிழ்வுடன் வாழட்டும் என்று வாழ்த்தி, அனைவருக்கும் ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி நல்வாழ்த்துகளை மீண்டும் ஒருமுறை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.


Next Story