முல்லைப் பெரியாறு அணையை வயநாடு நிலச்சரிவுடன் ஒப்பிட்டு விஷம பிரசாரம்: ஓபிஎஸ் கண்டனம்


முல்லைப் பெரியாறு அணையை வயநாடு நிலச்சரிவுடன் ஒப்பிட்டு விஷம பிரசாரம்: ஓபிஎஸ் கண்டனம்
x

முல்லைப் பெரியாறு அணை குறித்து தமிழக விவசாயிகளிடையே அச்சம் நிலவுகிறது என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

சென்னை,

முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

மதுரை, திண்டுக்கல், தேனி, சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களின் குடிநீர் மற்றும் பாசன வசதிக்கு பயன்படும் முக்கிய அணையாக முல்லைப் பெரியாறு அணை விளங்கி வருகிறது. தென் தமிழக மக்களின் உயிர்நாடியாக விளங்கும் முல்லைப் பெரியாறு அணை இன்றைக்கும் வலுவாக இருப்பதற்குக் காரணம், அந்த அணை புவி ஈர்ப்பு விசையின் அடிப்படையில் கட்டப்பட்டுள்ளது.

பொதுவாக புவி ஈர்ப்பு விசையின் அடிப்படையில் கட்டப்படும் அணைகள் நீர் அழுத்தம்; அலைகளால் ஏற்படும் அழுத்தம்; நில அதிர்வுகளினால் ஏற்படும் விசை போன்றவற்றை தனது பளுவினால் தாங்கிக் கொள்ளும் சக்தி வாய்ந்தவை. இப்படிப்பட்ட புவி ஈர்ப்பு விசையின் அடிப்படையில், சுண்ணாம்பு சுர்க்கி கலவையால் கருங்கல்லில் கட்டப்பட்டது முல்லைப் பெரியாறு அணை ஆகும். எனவே தான், புவி ஈர்ப்பு அடிப்படையில் கட்டப்பட்ட முல்லைப் பெரியாறு அணை இன்றளவும் உறுதியாகவும், வலிமை மிக்கதாகவும் விளங்குகிறது.

இந்தச் சூழ்நிலையில், தற்போது வயநாட்டில் ஏற்பட்டுள்ள நிலச்சரிவினை ஒப்பிட்டு சில சுயநலவாதிகள் சமூக வலைதளங்களில் பொய்ப் பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். இயற்கை பேரழிவு எங்கு நடந்தாலும், அதனை முல்லைப் பெரியாறு அணையுடன் ஒப்பிட்டுப் பேசுவதை சிலர் வாடிக்கையாகக் கொண்டிருக்கின்றனர். 2021-ம் ஆண்டு அக்டோபர் மாதம் கேரளாவில் கனமழை பெய்து, இடுக்கி மாவட்டம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டபோதும், முல்லைப் பெரியாறு அணை பலமின்றி இருப்பதாக கூறப்பட்டது. அதேபோன்ற கருத்து தற்போதும் பரப்பப்பட்டு வருகிறது. இதுபோன்ற விஷமப் பிரச்சாரம் கடும் கண்டனத்திற்குரியது. கேரளாவின் இந்தச் செயல் தமிழக விவசாயிகளை பெரும் கவலை அடைய வைத்துள்ளது.

புவி ஈர்ப்பு விசையின் அடிப்படையில் கட்டப்பட்ட முல்லைப் பெரியாறு அணை வலுவாக இருக்கின்ற நிலையிலும், புதிய அணை கட்டப்பட வேண்டுமென்ற கோரிக்கையை வலுப்படுத்த இதுபோன்ற யுக்திகளை அவ்வப்போது சிலர் மேற்கொள்கின்றனர். இந்த நிலையிலும், இதனை எதிர்த்து திமுகவோ அல்லது காங்கிரஸ் கட்சியோ வாய் திறக்காமல் இருப்பது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கச்சத்தீவில் தமிழக மீனவர்களுக்கான உரிமை தாரைவார்க்கப்பட்டதுபோல், முல்லைப் பெரியாறு அணையில் தமிழக விவசாயிகளுக்குள்ள உரிமையும் காவு கொடுக்கப்பட்டுவிடுமோ என்ற அச்சம் தமிழக விவசாயிகளிடையே நிலவுகிறது. இது தொடர்பாக, போராட்டங்களையெல்லாம் தமிழக விவசாயிகள் மேற்கொண்டுள்ளனர்.

உரிமையா, உறவா என்றால் உரிமைதான் முக்கியம் என்பதை மனதில் நிலைநிறுத்தி, கேரளாவின் புதிய அணை திட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கவும், சுப்ரீம் கோர்ட்டில் இது குறித்த வழக்கு வந்தால், அதனை வலுவான வாதங்களை வைத்து முறியடிக்கவும், தமிழ்நாட்டிற்கு எதிராக பொய்ப் பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்படுவதை தடுத்து நிறுத்தவும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story