காதல் திருமணம்: மனைவியை கொன்று ஏரியில் புதைத்த கணவர்... அடுத்து நடந்த விபரீதம்


காதல் திருமணம்: மனைவியை கொன்று ஏரியில் புதைத்த கணவர்... அடுத்து நடந்த விபரீதம்
x

பொக்லைன் எந்திரம் மூலம் பள்ளம் தோண்டி அதில் மனைவியின் உடலை போட்டு புதைத்தார்.

கடலூர்,

கடலூர் மாவட்டம், வேப்பூர் அடுத்த லட்சுமணபுரம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராமச்சந்திரன் மகன் சக்திவேல்(வயது 33). பொக்லைன் எந்திர ஆபரேட்டரான இவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சுவேதா(20) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு குழந்தை இல்லை.

இந்த நிலையில் கணவன், மனைவி இருவரும் கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அடுத்த நயினார்பாளையம் அருகே வாடகை வீட்டில் குடியேறினர். சக்திவேல், அந்த பகுதியில் உள்ள ஏரிகளில் பொக்லைன் எந்திரம் மூலம் மண் அள்ளும் வேலை செய்து வந்தார்.

நேற்று வி.அலம்பலம் கிராம ஏரியில் மண் அள்ளும் பணியில் கணவன், மனைவி இருவரும் ஈடுபட்டனர். அப்போது கணவன், மனைவிக்கிடையே திடீரென தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. இதில் ஆத்திரம் அடைந்த சக்திவேல், சுவேதாவை தாக்கியதில் அவர் மயங்கி விழுந்து உயிரிழந்தார். இதனால் செய்வதறியாமல் தவித்த அவர் அதே இடத்தில் பொக்லைன் எந்திரம் மூலம் பள்ளம் தோண்டி அதில் மனைவியின் உடலை போட்டு புதைத்தார்.

பின்னர் நடந்த சம்பவத்தை தனது செல்போனில் ஆடியோவாக பதிவு செய்து அதை உறவினர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் அனுப்பினார். பின்னர் சக்திவேல் அருகில் இருந்த மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.

அதன் பேரில் கள்ளக்குறிச்சி துணை போலீஸ் சூப்பிரண்டு தேவராஜ் தலைமையில் கீழ்குப்பம் போலீசார் மற்றும் சின்னசேலம் தாசில்தார் கமலக்கண்ணன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அதேபோல் சக்திவேல் அனுப்பிய வாட்ஸ்-அப் பதிவை பார்த்து அதிர்ச்சி அடைந்த உறவினர்களும் அங்கு வந்தனர். பின்னர் தாசில்தார் முன்னிலையில் சுவேதாவின் உடல் தோண்டி எடுக்கப்பட்டது. தம்பதியின் உடலை பார்த்து அவரது உறவினர்கள் கதறி அழுதனர்.

தொடர்ந்து கணவன், மனைவி இருவரின் உடலையும் பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். சுவேதாவை கொன்று உடலை புதைத்து விட்டு சக்திவேல் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் என்னவென்று தெரியவில்லை? இது குறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story