பொது நிதியில் இருந்து செலவு செய்ய அனுமதிக்கப்படுமா?


பொது நிதியில் இருந்து செலவு செய்ய அனுமதிக்கப்படுமா?
x

அத்தியாவசிய பணிகளுக்கு பணம் ஒதுக்காத நிலையில் பொது நிதியில் இருந்து செலவு ெசய்ய அனுமதி வழங்க வேண்டும் என பஞ்சாயத்து நிர்வாகத்தினர் எதிர்பார்க்கின்றனர்.

விருதுநகர்

சிவகாசி,

அத்தியாவசிய பணிகளுக்கு பணம் ஒதுக்காத நிலையில் பொது நிதியில் இருந்து செலவு ெசய்ய அனுமதி வழங்க வேண்டும் என பஞ்சாயத்து நிர்வாகத்தினர் எதிர்பார்க்கின்றனர்.

குடிநீர் கட்டண வரி

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 450 பஞ்சாயத்துகளிலும் கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் வரை பொதுமக்கள் வீட்டு வரி, குடிநீர் கட்டணம், தொழில்வரி, தொழில் உரிம கட்டணங்கள் பஞ்சாயத்து அலுவலகங்களில் செலுத்தி உரிய ரசீது பெற்றுக்கொண்டனர்.

இந்த தொகை அனைத்தும் பஞ்சாயத்து பொது நிதியில் சேர்க்கப்பட்டு வளர்ச்சி பணிகளுக்கு செலவிடப்பட்டு வந்தது. இந்தநிலையில் கடந்த மே மாதம் 22-ந்தேதி முதல் தமிழகத்தில் உள்ள பஞ்சாயத்து கணக்குகள் அனைத்தும் ஒன்றாக்கப்பட்டது. பின்னர் இந்த கணக்கில் தான் பொதுமக்கள் தங்கள் வரிகளை செலுத்த வேண்டும் என்றும் பஞ்சாயத்து அலுவலகத்தில் செலுத்த கூடாது என்று திடீர் தடை விதிக்கப்பட்டது.

பஞ்சாயத்து நிர்வாகம் தவிப்பு

இதையடுத்து அரசு அறிவித்த வங்கி கணக்கில் பொதுமக்கள் தங்களது வரிகளை செலுத்தி வருகிறார்கள். இதனால் பஞ்சாயத்து பொது நிதிக்கு வரும் நிதி முற்றிலுமாக தடுக்கப்பட்டது. இந்தநிலையில் பஞ்சாயத்து பகுதியில் ஏற்படும் அவசர செலவுகளை செய்ய முடியாமல் சில பஞ்சாயத்து நிர்வாகங்கள் தவித்தது. அரசும், பஞ்சாயத்து நிர்வாகத்திற்கு தேவையான செலவினங்களுக்கு தேவையான நிதி ஒதுக்கவில்லை என கூறப்படுகிறது.

இதனால் பல இடங்களில் அத்தியாவசிய பணிகளை செய்ய முடியாமல் பஞ்சாயத்து நிர்வாகங்கள் தவித்தது. பல இடங்களில் குப்பைகளை அகற்ற முடியாமலும், சில இடங்களில் குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்புகளை சரி செய்ய முடியாமலும் அவதிப்படுவதாக கூறப்படுகிறது.

அனுமதி கிடைக்குமா?

இந்தநிலையில் பஞ்சாயத்து ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கவும், அத்தியாவசிய பணிகளை செய்து கொடுக்க தேவையான நிதிகளை பொதுநிதியில் இருந்து எடுத்து செலவு செய்ய அரசு உரிய அனுமதி வழங்கும் என்ற எதிர்பார்ப்பில் பஞ்சாயத்து நிர்வாகங்கள் காத்திருக்கிறது. ஆனால் கடந்த 1 மாதமாக இதற்கான அனுமதி கிடைக்காமல் உள்ளது.

இதனால் பல பஞ்சாயத்துகள் அடுத்து வரும் காலங்களில் பொதுமக்களின் எதிர்ப்புகளை சந்திக்க வேண்டிய நிலை ஏற்படும் என கூறப்படுகிறது. ஆதலால் இதுகுறித்து தமிழக அரசு உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பஞ்சாயத்து நிா்வாகத்தினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.


Related Tags :
Next Story