திருக்கண்ணபுரம் சவுரிராஜப்பெருமாள் கோவிலில் தங்க கருட சேவை

மாசி மக பெருவிழாவையொட்டி சவுரிராஜப்பெருமாள் கோவிலில் தங்க கருட சேவை நடந்தது.இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
திட்டச்சேரி:
மாசி மக பெருவிழாவையொட்டி சவுரிராஜப்பெருமாள் கோவிலில் தங்க கருட சேவை நடந்தது.இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
மாசி மக பெருவிழா
திருமருகல் ஒன்றியம் திருக்கண்ணபுரத்தில் சவுரிராஜப் பெருமாள் கோவில் அமைந்துள்ளது. 5 ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்டு 108 திவ்ய தேசங்களுள் 17-வது தலமாக போற்றப்படும் இந்த கோவிலில் ஆண்டுதோறும் மாசிமக பெருவிழா 15 நாட்கள் நடைபெறுவது வழக்கம்.
அதன்படி ஆண்டு மாசி மக பெருவிழா கடந்த மாதம் 27-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் 4-வது நாளான நேற்று காலை பெருமாள் தங்கப்பல்லக்கில் திருமேனி சேவை வீதி உலா புறப்பாடு நடந்தது.
தங்க கருட சேவை
இரவு பெருமாள் தங்க கருட சேவை நடந்தது. இதையொட்டி பெருமாள் தங்க கருட வாகனத்துடன் கூடிய ஓலை சப்பரத்தில் எழுந்தருளி வீதி உலா நடந்தது. இதில் தக்கார் முருகன், செயல் அலுவலர் குணசேகரன் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர் விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம்நாளை(ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணிக்கு நடக்கிறது.
7-ந் தேதி காலை சவுரிராஜப்பெருமாள் புறப்பட்டு திருமருகல் வரதராஜப்பெருமாள் கோவிலுக்கு வந்து அங்குள்ள வரதராஜப்பெருமாள் உடன் சேர்ந்து 2 பெருமாள்களும் தீர்த்தவாரிக்கு திருமலைராஜன்பட்டினம் கடற்கரைக்கு செல்லும் நிகழ்ச்சியும், அன்று மாலை கடற்கரையில் பெருமாள் கருட வாகனத்தில் தீர்த்தவாரியும் நடக்கிறது.
தெப்பத்திருவிழா
12-ந் தேதி இரவு 10 மணிக்கு சவுரிராஜப்பெருமாள் கோவில் முன் அமைந்துள்ள நித்ய புஷ்கரணி குளத்தில் தெப்பத்திருவிழா நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர், கிராம மக்கள் செய்து வருகின்றனர்.