தர்மபுரியில் வயிற்றில் இருக்கும் சிசுவின் பாலினத்தை கண்டறிந்த கும்பல் கைது


தர்மபுரியில் வயிற்றில் இருக்கும் சிசுவின் பாலினத்தை கண்டறிந்த கும்பல் கைது
x

தர்மபுரியில் கர்ப்பிணி பெண்களின் வயிற்றில் இருக்கும் சிசுவின் பாலினத்தை கண்டறிந்த கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர்.

தர்மபுரி,

தர்மபுரி மாவட்டத்தில் கர்ப்பிணி பெண்களின் வயிற்றில் இருக்கும் சிசுவின் பாலினத்தை கண்டறிந்து, கருக்கலைப்பு செய்யும் கும்பல் இயங்கி வருவதாக சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலின் அடிப்படையில் ஊரக நலத்துறை இணை இயக்குனர் மருத்துவர் சாந்தி தலைமையிலான அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

இந்த விசாரணையில், கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த முருகேசன் என்பவர், ஸ்கேன் இயந்திரம் மூலம், கர்ப்பிணி பெண்களின் கருவில் இருக்கும் சிசுவின் பாலினத்தை கண்டறிந்து சொல்லி வந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். இதற்காக ஒரு நபரிடம் ரூ.13 ஆயிரம் வீதம் அவர் பணம் பெற்றுள்ளார். இது தொடர்பாக முருகேசன், இடைத்தரகர் லலிதா, நடராஜன், சின்ராஜ் உள்ளிட்ட நான்கு பேரை பிடித்து பென்னாகரம் போலீசாரிடம் அதிகாரிகள் ஒப்படைத்தனர்.

அவர்கள் நான்கு பேரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்த ஸ்கேன் இயந்திரம், பணம், சொகுசு கார், இருசக்கர வாகனம் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர். இதில் கைது செய்யப்பட்ட முருகேசன், ஏற்கனவே சட்டவிரோதமாக கருக்கலைப்பு செய்ததாக கள்ளக்குறிச்சியில் கைதானவர் என்பது குறிப்பிடத்தக்கது.



Next Story