மாடு வியாபாரி மகன் முதல் சப்-இன்ஸ்பெக்டர் வரை... காதல் வலையில் வீழ்த்தி மோசடி செய்த இளம்பெண்


மாடு வியாபாரி மகன் முதல் சப்-இன்ஸ்பெக்டர் வரை... காதல் வலையில் வீழ்த்தி மோசடி செய்த இளம்பெண்
x

மாடு வியாபாரி மகன் முதல் சப்-இன்ஸ்பெக்டர் வரை பல வாலிபர்களை காதல் வலையில் வீழ்த்தி மோசடி செய்த இளம்பெண்ணை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

தாராபுரம்,

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை சேர்ந்தவர் மகேஷ் அரவிந்த் (29 வயது). இவருக்கு திருமணம் நடத்தி வைக்க உறவினர்கள் பெண் பார்த்து வந்தனர். இந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்பு இணைய தள செயலி மூலம் ஈரோடு மாவட்டம் கொடுமுடியை சேர்ந்த சத்யா (30 வயது) என்ற பெண்ணுடன் மகேஷ் அரவிந்துக்கு பழக்கம் ஏற்பட்டது.

பின்னர் மகேஷ் அரவிந்தும், சத்யாவும் பழனிக்கு சென்று திருமணம் செய்தனர். இதை அறிந்த மகேஷ் அரவிந்த் பெற்றோர் மகிழ்ச்சியடைந்து வரவேற்றதுடன், சத்யாவுக்கு தேவையான நகை மற்றும் புடவைகள் வாங்கிக் கொடுத்து நன்றாக பார்த்துக் கொண்டனர். திருமணமாகி 2 நாட்கள் குடும்பம் நடத்திய நிலையில் மகேஷ் அரவிந்த்தின் பெற்றோர் ஈரோடு மாவட்டம் கொடுமுடியில் உள்ள சத்யாவின் பெற்றோரிடம் பேசி திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடத்தலாம் என முடிவு செய்தனர்.

அதனைத் தொடர்ந்து மகேஷ் அரவிந்தின் பெற்றோர் கொடுமுடி சென்று சத்யா பற்றி விசாரித்தனர். அப்போது சத்யா பல ஆண்களை காதல் வலையில் வீழ்த்தி அவர்களை திருமணம் செய்து கொண்டதும், பலரிடம் மோசடியில் ஈடுபட்டதும் தெரியவந்தது. பின்னர் அவர்கள் சத்யாவிடம் இது குறித்து விசாரித்தபோது, கோபமடைந்த அவர், மிரட்டியுள்ளார். இதனால் உஷாரான அவர்கள் சமாதானம் செய்வது போல் நைசாக பேசி மகளிர் போலீஸ் நிலையத்திற்கு சத்யாவை அழைத்துச் சென்றனர்.

போலீசார் அவரிடம் விசாரணை செய்ததில், கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பே சென்னையைச் சேர்ந்த அருண், கரூரைச் சேர்ந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திக் என்பவரையும் காதலித்து ஏமாற்றி திருமணம் செய்து குடும்பம் நடத்தியதும், கொடுமுடி அருகே உள்ள சாலைப்புதூரைச் சேர்ந்த மாட்டு வியாபாரி ராஜமாணிக்கத்தின் மகன் பிரகாஷ் என்பவரையும் ஏமாற்றி பணம் பறித்ததும் தெரியவந்தது. அதுமட்டுமல்லாமல் கடந்த 2012-ம் ஆண்டு ராஜேஷ் என்பவரை திருமணம் செய்ததில் சத்யாவுக்கு ஒரு பெண் குழந்தை இருப்பதும், சத்யாவின் திருமணத்திற்கு தமிழ்ச்செல்வி என்பவர் புரோக்கராக செயல்பட்டதும் தெரியவந்தது.

அத்துடன் திருப்பூர், ஈரோடு, கோவை, மதுரை, சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் பல வாலிபர்களை சத்யா திருமணம் செய்து பல லட்சம் ரூபாய் மோசடி செய்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான தமிழ்ச்செல்வி, சத்யா ஆகியோரை வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story