மீனவர் விவகாரம் - வெளியுறவுத்துறை மந்திரிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்


மீனவர் விவகாரம் - வெளியுறவுத்துறை மந்திரிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்
x

மீனவர்களுக்கு விதிக்கப்பட்ட அபராதத் தொகையை தள்ளுபடி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமென முதல்-அமைச்சர் கடிதம் எழுதியுள்ளார்.

சென்னை,

தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைதுசெய்வதும், அவர்களின் படகுகளை பறிமுதல் செய்வதோடு, மீனவர்களுக்கு இலங்கை கோர்ட்டு அபராதம் விதிப்பதும் வாடிக்கையாகி வருகிறது. இன்றும் 3 மீனவர்களுக்கு 6 மாதம் சிறை தண்டனை விதித்துள்ள இலங்கை நீதிமன்றம், 8 மீனவர்களுக்கு இலங்கை மதிப்பில் தலா ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்துள்ளது. முன்னதாக தூத்துக்குடி மீனவர்கள் 12 பேருக்கு ரூ.3.5 கோடி அபராதம் விதித்து இருந்தது. தொடர்ந்து அத்துமீறும் இலங்கை கடற்படையின் நடவடிக்கைகளுக்கு மத்திய அரசு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என பல்வேறு கட்சிகள் கோரிக்கை விடுத்து வருகின்றன.

இந்த நிலையில், தமிழக மீனவர்கள் விவகாரம் தொடர்பாக மத்திய மந்திரி ஜெய்சங்கருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் அவர் கூறி இருப்பதாவது;

தமிழ்நாட்டு மீனவர்கள் தங்களது பாரம்பரிய மீன்பிடிப் பகுதிகளில் மீன் பிடித்துக் கொண்டிருக்கும்போது அடிக்கடி கைது செய்யப்படுவது அவர்களது வாழ்வாதாரத்தை மிகவும் பாதிக்கிறது. தமிழ்நாட்டின் புதுக்கோட்டையைச் சேர்ந்த 4 மீனவர்களை அவர்களது மீன்பிடிப் படகுடன் (பதிவு எண்.IND-TN-08-MM-1418) இலங்கைக் கடற்படையினர் சிறைபிடித்துள்ளனர்.

இந்தப் பாரம்பரிய மீன்பிடிப் பகுதிகள் தமிழ்நாட்டு மீனவர்களுக்கு பல தலைமுறைகளாக வாழ்வாதாரமாக திகழ்கிறது. மீனவர்கள் அடிக்கடி கைது செய்யப்படுவதும் படகுகள் பறிமுதல் செய்யப்படுவதும் தமிழ்நாட்டு மீனவர் சமூகத்தினருக்கு மிகுந்த துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், 21-07-2024 அன்று IND- TN-12-MM-5900 என்ற பதிவெண் கொண்ட படகில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது கைது செய்யப்பட்ட 12 தமிழ்நாட்டு மீனவர்களுக்கு இலங்கை நீதிமன்றம் 03-09-2024 அன்று 1.5 கோடி ரூபாய் அபராதம் விதித்தது. இது ஏற்கனவே துயரத்தில் உள்ள மீனவ குடும்பங்களை மிகவும் வேதனைக்குள்ளாக்குவதுடன் அவர்களுக்கு மிகப்பெரிய இழப்பையும் ஏற்படுத்தும்.

எனவே, இலங்கை வசம் உள்ள மீன்பிடிப் படகுகளை விடுவித்திடவும், மீனவர்களை தாயகத்திற்குத் திரும்பி அழைத்து வரவும், மீனவர்கள் மீது விதிக்கப்பட்ட அபராதத் தொகையினை மனிதாபிமான அடிப்படையில் தள்ளுபடி செய்யவும் உரிய நடவடிக்கை எடுக்குமாறு வெளியுறவுத் துறை மந்திரி ஜெய்சங்கரை வலியுறுத்துகிறேன்."

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story