சென்னையில் பணியின்போது உயிரிழந்த காவலரின் குடும்பத்தினருக்கு ரூ.25 லட்சம் நிதியுதவி - முதல்-அமைச்சர் அறிவிப்பு


சென்னையில் பணியின்போது உயிரிழந்த காவலரின் குடும்பத்தினருக்கு ரூ.25 லட்சம் நிதியுதவி - முதல்-அமைச்சர் அறிவிப்பு
x

சென்னையில் பணியின்போது உயிரிழந்த காவல் ஆய்வாளரின் குடும்பத்தினருக்கு ரூ.25 லட்சம் நிதியுதவி வழங்க முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

சென்னை,

சென்னை திருப்பதி திருக்குடை ஊர்வலத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தபோது உயிரிழந்த கொரட்டூர் காவல் ஆய்வாளரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்துள்ள முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அவர்களுக்கு நிவாரண நிதியாக ரூ.25 லட்சம் வழங்கப்படும் என அறிவித்துள்ளார். இது தொடர்பாக முதல்-அமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;-

"சென்னை கொரட்டூர் காவல் நிலையத்தில் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளராக பணியாற்றி வந்த முத்துகுமார் (வயது 47) என்பவர் இன்று (04.10.2024) சென்னையில் நடைபெற்ற திருப்பதி திருக்குடை ஊர்வலத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தபோது திடீரென்று மயக்கம் ஏற்பட்டு உடனடியாக சென்னை முகப்பேரிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் பிற்பகல் 01.15 மணியளவில் மாரடைப்பு காரணமாக சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்ற துயரகரமான செய்தியைக் கேட்டு மிகுந்த வருத்தமும், வேதனையுமடைந்தேன்.

காவல் ஆய்வாளர் முத்துகுமாரின் உயிரிழப்பு தமிழ்நாடு காவல்துறைக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். காவல் ஆய்வாளர் முத்துகுமாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், அவரது உறவினர்கள் மற்றும் அவருடன் பணிபுரிபவர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, அவரது குடும்பத்தினருக்கு இருபத்தைந்து லட்சம் ரூபாய் நிவாரண நிதி வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்."

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story