பிளஸ் 2 பொதுத்தேர்வில் 2 பாடத்தில் தோல்வி: உயிரை மாய்த்த மாணவன் - சென்னையில் அதிர்ச்சி
![பிளஸ் 2 பொதுத்தேர்வில் 2 பாடத்தில் தோல்வி: உயிரை மாய்த்த மாணவன் - சென்னையில் அதிர்ச்சி பிளஸ் 2 பொதுத்தேர்வில் 2 பாடத்தில் தோல்வி: உயிரை மாய்த்த மாணவன் - சென்னையில் அதிர்ச்சி](https://media.dailythanthi.com/h-upload/2023/05/08/1277762-studnets33.webp)
தமிழ், கம்ப்யூட்டர் அப்ளிகேசனில் குறைந்த மதிப்பெண்ணும் பெற்று இருந்ததாக தெரிகிறது.
திருநின்றவூர்,
ஆவடி, கோவர்த்தனகிரி பகுதியை சேர்ந்தவர் கனகராஜ்.தனியார் கல்லூரியில் பஸ் டிரைவராக வேலைபார்த்து வருகிறார். இவரது மகன் தேவா(வயது17). அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். அவர் நடந்து முடிந்த பிளஸ்-2 தேர்வை சரியாக எழுதவில்லை. இதுபற்றி அவர் பெற்றோரிடம் கூறிவந்தார். அவருக்கு பெற்றோர் ஆறுதல் கூறி வந்தனர்.
இந்த நிலையில் இன்று காலை பிளஸ்-2 தேர்வு முடிவு வெளியானது. அப்போது தேவா தமிழ் மற்றும் கம்ப்யூட்டர் அப்ளிகேசன் பாடத்தில் தோல்வி அடைந்து இருந்தார். அவர் தமிழ், கம்ப்யூட்டர் அப்ளிகேசனில் குறைந்த மதிப்பெண்ணும் பெற்று இருந்ததாக தெரிகிறது. இதனால் மாணவர் தேவா மிகவும் மனவேதனை அடைந்தார்.
அவருக்கு பெற்றோர் ஆறுதல் கூறி அடுத்த தேர்வில் பரீட்சை எழுதி கொள்ளலாம் என்று தெரிவித்தனர். எனினும் தேர்வு தோல்வியால் மிகுந்த மனவேதனையில் இருந்த தேவா வீட்டில் உள்ள அறையில் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்து அவரது பெற்றோர் கதறி துடித்தனர்.
தேர்வு தோல்வியால் பிளஸ்-2மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து ஆவடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மாணவர்கள் மனநல ஆலோசனை பெற 14417 என்ற எண்ணை தொடர்பு கொள்ள அரசு அறிவுறுத்தி உள்ளது. ஏற்கனவே திருவண்ணாமலையை சேர்ந்த மாணவன் தேர்வு முடிவு வெளியாவதற்கு முன்பே தற்கொலை செய்த நிலையில், மேலும் ஒரு மாணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.