என்ஜினீயரிங் மாணவர் சேர்க்கை: சிறப்பு பிரிவு கலந்தாய்வு இன்று தொடக்கம்


என்ஜினீயரிங் மாணவர் சேர்க்கை: சிறப்பு பிரிவு கலந்தாய்வு இன்று தொடக்கம்
x

கோப்புப்படம்

பொது சிறப்பு பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு இன்று (வியாழக்கிழமை) தொடங்குகிறது.

சென்னை,

அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் 433 என்ஜினீயரிங் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இந்த கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டில் ஒரு லட்சத்து 79 ஆயிரத்து 938 என்ஜினீயரிங் படிப்புக்கான இடங்கள் உள்ளன. இதற்கான, 2024-25ம் கல்வியாண்டு மாணவர் சேர்க்கை கலந்தாய்வு கடந்த 22-ந்தேதி தொடங்கியது.

முதல்கட்டமாக, அரசு பள்ளியில் படித்த மாற்றுத்திறனாளி மாணவர்கள், விளையாட்டு வீரர்கள், முன்னாள் ராணுவ வீரர்களின் குழந்தைகளுக்கான சிறப்பு பிரிவு 7.5 சதவீத உள்ஒதுக்கீடு கலந்தாய்வு, நடைபெற்றது. இதில், மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு 661 இடங்கள் உள்ளன. ஆனால், கலந்தாய்வில் 70 மாணவர்கள் மட்டுமே பங்கேற்று விருப்ப கல்லூரிகளை தேர்வு செய்தனர். அவர்களில், 48 பேருக்கு இறுதி ஒதுக்கீடு ஆணை வழங்கப்பட்டது. அதேபோல், விளையாட்டு வீரர்களுக்கு 38 இடங்கள் உள்ளன. இதற்காக, 262 மாணவர்கள் விருப்ப கல்லூரிகளை தேர்வு செய்தனர். அதில், தகுதியான 38 மாணவர்களுக்கு இறுதி ஒதுக்கீடு ஆணை வழங்கப்பட்டது.

மேலும், முன்னாள் ராணுவ வீரர்களின் குழந்தைகளுக்கு 11 இடங்கள் உள்ளன. இதில், 7 மாணவர்கள் கலந்தாய்வில் பங்கேற்றனர். அவர்களில், 6 பேருக்கு என்ஜினீயரிங் படிப்புக்கான இறுதி ஒதுக்கீடு ஆணை வழங்கப்பட்டது. இந்த பிரிவில், 618 என்ஜினீயரிங் படிப்பு இடங்கள் காலியாக உள்ளன.

இந்த நிலையில், பொது சிறப்பு பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு இன்று (வியாழக்கிழமை) தொடங்குகிறது. இதில், மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு 8 ஆயிரத்து 948 இடங்கள் உள்ளன. ஆனால், கலந்தாய்வில் பங்கேற்க 416 மாணவர்கள் தகுதி பெற்றுள்ளனர். விளையாட்டு பிரிவில் 456 இடங்களுக்கு 2 ஆயிரத்து 113 மாணவர்கள் தகுதி பெற்றுள்ளனர். முன்னாள் ராணுவ வீரர்களின் குழந்தைகளுக்கு உள்ள 143 இடங்களுக்கு ஆயிரத்து 243 மாணவர்கள் தகுதி பெற்றுள்ளனர். சிறப்பு பிரிவு மாணவர்கள், இன்று (வியாழக்கிழமை) காலை 10 மணி முதல் நாளை (வெள்ளிக்கிழமை) மாலை 5 மணி வரை தங்களுக்கு விருப்பமான கல்லூரிகளை தேர்வு செய்யலாம்.

வருகிற 27-ந்தேதி, தற்காலிக ஒதுக்கீடு ஆணை வழங்கப்படும். இந்த ஒதுக்கீடு ஆணையை, அன்றைய தினம் இரவு 7 மணிக்கு மாணவர்கள் இறுதி செய்ய வேண்டும். உறுதி செய்த மாணவர்களில், தகுதியானவர்களுக்கு வருகிற 28-ந்தேதி காலை 7 மணிக்கு என்ஜினீயரிங் படிப்புக்கான இறுதி ஒதுக்கீடு ஆணை வழங்கப்படும்.


Next Story