யானை சின்னம் விவகாரம்: சட்ட நிபுணர்களுடன் விஜய் ஆலோசனை


யானை சின்னம் விவகாரம்: சட்ட நிபுணர்களுடன் விஜய் ஆலோசனை
x

யானை சின்னம் எங்களுக்கு சொந்தமானது என்று பகுஜன் சமாஜ் கட்சி தேர்தல் கமிஷனில் புகார் அளித்துள்ளது.

சென்னை,

தமிழக வெற்றிக்கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சி தொடங்கிய விஜய் கட்சியின் புதிய கொடியை கடந்த 22- ந்தேதி சென்னையில் அறிமுகப்படுத்தினார். சிவப்பு, மஞ்சள், சிவப்பு நிறத்துடன் நடுவில் 2 யானைகளுக்கு மத்தியில் வாகைப்பூ கொடியில் பொறிக்கப்பட்டு உள்ளது. கட்சி கொடி பற்றிய விளக்கத்தை அடுத்த மாதம் நடைபெறும் கட்சி மாநாட்டில் விளக்கி பேசுவதாக விஜய் அறிவித்துள்ளார்.

இந்த நிலையில் கொடியில் இடம்பெற்றுள்ள யானை சின்னம் எங்களுக்கு சொந்தமானது என்று பகுஜன் சமாஜ் கட்சி தேர்தல் கமிஷனில் புகார் தெரிவித்துள்ளது. அந்த மனுவில், அங்கீகாரம் பெற்ற எங்கள் கட்சியின் தேர்தல் சின்னமான யானை சின்னத்தை இந்தியா முழுவதும் கொடியிலும் பயன்படுத்தி வருகிறோம். யானை சின்னம் பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய அடையாளமாக உள்ளது.

இந்த நிலையில் தற்போது புதிதாக கட்சி தொடங்கி இருக்கும் விஜய் தனது கட்சி கொடியில் யானை உருவத்தை பயன்படுத்தி உள்ளார். இதற்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவித்தோம். ஆனால் எந்த பதிலையும் விஜய் எங்களுக்கு தராமலும் நீக்குவதற்கான எந்த நடவடிக்கையிலும் ஈடுபடாமல் இருக்கிறார். எனவே சட்டவிரோதமாக விஜய் கட்சி கொடியில் உள்ள யானை உருவத்தை அகற்ற வேண்டும் இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய், கட்சி பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் மற்றும் சட்டநிபுணர்களுடன் ஆலோசனை நடத்தினார். இதையடுத்து எடுக்கப்பட்ட முடிவில், பகுஜன் சமாஜ் கட்சி புகாருக்கு தேர்தல் கமிஷனிடம் இருந்து விளக்கம் கேட்டு முறைப்படி கடிதம் வந்தால் அதற்கு தகுந்த விளக்கம் அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதுபற்றி தமிழக வெற்றிக்கழக நிர்வாகி ஒருவர் கூறும்போது, கட்சி சின்னத்தைதான் வேறொருவர் பயன்படுத்தக் கூடாது என்று தேர்தல் விதி இருக்கிறது. எங்கள் கட்சி கொடியில் யானைகள் பயன்படுத்தப்பட்டிருப்பது எந்த கட்சி சின்னத்துடனோ கொடியுடனோ பொருந்தாது. தேர்தல் கமிஷன் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பினால் தகுந்த விளக்கத்தை அளிப்போம் என்றார்.


Next Story