பள்ளி பாடப்புத்தகங்கள் விலை உயர்வு: தி.மு.க. அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம்


பள்ளி பாடப்புத்தகங்கள் விலை உயர்வு: தி.மு.க. அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம்
x

கோப்புப்படம்

1 முதல் பிளஸ்-2 வகுப்பு வரை உள்ள பள்ளி பாடப்புத்தகங்கள் விலை 45 சதவீதம் விலை உயர்ந்துள்ளது.

சென்னை,

தமிழ்நாடு முழுவதும் மாநில பாடத்திட்டத்தின் கீழ் இயங்கி வரும் 1 முதல் பிளஸ்-2 வரை உள்ள வகுப்புகளில் கடந்த 2011-ம் ஆண்டு சமச்சீர் கல்வி முறை அமல்படுத்தப்பட்டது. இதன் மூலம் அரசு பள்ளிகள், அரசு உதவிபெறும் பள்ளிகள், தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு ஒரே பாடத்திட்டம் நடைமுறைக்கு வந்தது. வகுப்பு வாரியாக புத்தகங்களை அச்சிட்டு தமிழ்நாடு பாடநூல் நிறுவனம் வழங்கியது. அதன்படி, அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு இலவசமாகவும், தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவர்களுக்கு கட்டணம் நிர்ணயித்தும் புத்தகங்கள் வழங்கப்பட்டது. தொடர்ந்து ஆண்டுதோறும் வழங்கப்பட்டும் வருகிறது.

இந்த நிலையில், காகிதத்தின் விலை ஏற்றம், அச்சிடுவதற்கான மை விலை உயர்வு, பணியாளர்களின் கூலி அதிகரிப்பு காரணமாக தமிழ்நாடு பாடநூல் கழகத்துக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டது. அதை ஈடுகட்டும் வகையில், 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை புத்தகங்களின் விலையை உயர்த்திக்கொள்ள முடிவு செய்யப்பட்டது. கடைசியாக 2018-2019-ம் கல்வியாண்டில் பாடப்புத்தகங்கள் விலை உயர்த்தப்பட்டது. 5 ஆண்டுகளாக விலை உயர்த்தப்படாத நிலையில் தற்போது விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. புத்தக உற்பத்தி பொருட்களான காகிதம் 55 சதவீதமும், மேலட்டை 27 சதவீதமும் மற்றும் அச்சுக்கூலி 21 சதவீதம் விலை உயர்ந்துள்ளது. அதாவது, ஒரு புத்தகத்துக்கான உற்பத்தி செலவினம் நிர்ணயிக்கப்பட்ட விற்பனை விலையைவிட சராசரியாக 45 சதவீதம் வரை அதிகரித்துள்ளது.

இதையடுத்து நடப்பாண்டில் 1 முதல் பிளஸ்-2 வரையிலான வகுப்புகளுக்கு பாடப்புத்தகங்களின் பக்கங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப குறைந்தது ரூ,40 முதல் அதிகபட்சமாக ரூ,90 வரை விலை உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது,1 முதல் 4-ம் வகுப்பு புத்தகங்கள் ரூ,30 முதல் ரூ,40 வரையும், 5 முதல் 7-ம் வகுப்பு புத்தகங்கள் ரூ,30 முதல் 50 வரையும் உயர்த்தப்பட்டுள்ளன. மேலும், 8-ம் வகுப்பு புத்தகங்கள் ரூ,40 முதல் ரூ,70 வரையும், 9 முதல் பிளஸ்-2 வகுப்புகளுக்கு ரூ,50 முதல் ரூ,90 வரையும் விலை அதிகரிக்கப்பட்டுள்ளன.

பாடப்புத்தகங்கள் விலை உயர்வுக்கு அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

'கருவிலிருந்து கல்லறை வரை' தமிழக மக்கள் அனைவரும் பயன்பெறும் வகையில் பல்வேறு நலத் திட்டங்களை பார்த்துப் பார்த்து வழங்கி, மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்தது 30 ஆண்டுகால அதிமுக அரசுகள். கடந்த 39 மாதகால திராவிட மாடல் என்னும் விடியா தி.மு.க. ஆட்சி, 6 முதல் 60 வரை, வயது பேதமின்றி அனைவரையும் வாட்டி வதைத்து, கசக்கிப் பிழிந்து வருவது கண்கூடு.

நின்றால் வரி, நடந்தால் வரி, பேசினால் வரி, தண்ணீர் குடித்தால் வரி என்று அனைத்து வரிகளையும் மக்களின் தலையில் சுமத்திவிட்டு அவர்களை கடனாளியாக்கும் வேலையை, இந்த விடியா தி.மு.க. அரசின் முதல்-அமைச்சர் கனக்கச்சிதமாக மேற்கொண்டு வருகிறார். 'கல்விக் கண்' திறந்த காமராஜர், 'எந்த ஒரு குழந்தையும் பசியினால் கல்வி பயிலாமல் இருக்கக்கூடாது' என்று எண்ணிய புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., ஆதரவற்ற நிலையில் குழந்தைகளே இருக்கக்கூடாது என்ற எண்ணத்தில் 'தொட்டில் குழந்தை திட்டம்' கொண்டு வந்த புரட்சித் தலைவி அம்மா, எதிர்கால சந்ததியினர் நலனுக்காக நல்லாட்சிகளை வழங்கினார்கள்.

அம்மாவின் நல்லாட்சியில் கொண்டுவரப்பட்ட தாலிக்குத் தங்கம், விலையில்லா மடிக் கணினி போன்ற நலத் திட்டங்களை நிறுத்திவிட்டு அந்த நிதியை உயர் கல்வி படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு நிபந்தனையுடன் கல்வி உதவித் தொகையாக மடைமாற்றியது விடியா தி.மு.க. அரசு.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்து, உயர்கல்வி படிக்கச் செல்லும் மாணவ, மாணவியருக்கு, மாதந்தோறும் நிதியுதவி என்ற பெயரில் நிபந்தனையுடன் சிலருக்கு கல்வி உதவித் தொகை வழங்கி, பலருக்கு கிடைக்காமல் கடும் மன வேதனையில் மாணவர்கள் இருக்கும் இச்சூழ்நிலையில், தி.மு.க. பட்டிமன்றப் பேச்சாளர் ஒருவர் தலைமையேற்று நடத்தும் தமிழ் நாடு பாடநூல் நிறுவனம், அரசு பாடத் திட்டத்தில் படிக்கும் தனியார் பள்ளி மாணவர்களுக்கான பாடப் புத்தகங்களின் விலையை சுமார் 40 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ளதாக ஊடகங்களில் செய்தி வந்துள்ளது. இந்த விலை உயர்வு கடும் கண்டனத்திற்குரியது.

1-ஆம் வகுப்பு பாடப் புத்தகங்கள் ரூ. 390-ல் இருந்து ரூ. 550-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இவ்வாறு 1-ஆம் வகுப்பில் தொடங்கி 10-ஆம் வகுப்புவரை அனைத்து பாடப் புத்தகங்களின் விலையும் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால், மாநில கல்வித் திட்டத்தின்படி தனியார் பள்ளகளில் மாணவ, மாணவிகளை சேர்த்துள்ள பெற்றோர்கள் நிலை குலைந்து போயுள்ளனர். பாடப் புத்தகங்களின் விலை உயர்வு தனியார் பள்ளி மாணவர்கள் மட்டுமின்றி, போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் இளைஞர்களையும் பாதிக்கும்.

ஏற்கெனவே கடுமையான விலைவாசி உயர்வினாலும், பல மடங்கு அரசு கட்டணங்கள் உயர்வினாலும் சிரமப்பட்டுக் கொண்டிருக்கும் தமிழக மக்களின் தினசரி வாழ்வில் 'எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றுவது போல்', தற்போது உயர்த்தப்பட்டுள்ள பள்ளி பாடப் புத்தகங்களின் விலை உயர்வை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று, இந்த மக்கள் விரோத விடியா தி.மு.க. அரசை வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.


Next Story