மதுபோதையில் சாலையில் படுத்து தூங்கிய தொழிலாளி - சேலத்தில் பரபரப்பு


மதுபோதையில் சாலையில் படுத்து தூங்கிய தொழிலாளி - சேலத்தில் பரபரப்பு
x

மதுபோதையில் சாலையின் நடுவே சாக்குப்பையை விரித்து தொழிலாளி படுத்துக்கொண்டார்

சேலம்,

சேலம் மாவட்டம் எடப்பாடி- பூலாம்பட்டி சாலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அனல் மின்நிலைய ஊழியர் சங்கர் மதுபோதையில் நடுரோட்டில் படுத்திருந்தபோது அந்த வழியாக சென்ற வாகனம் தலையில் ஏறி இறங்கியதில் இறந்தார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதன் தாக்கம் அடங்குவதற்குள் இது போன்று மற்றொரு போதை நபர் சாலையில் படுத்து உறங்கிய சம்பவம் நடந்துள்ளது.

அது பற்றிய விவரம் வருமாறு:-

எடப்பாடி தாவாந்தெரு பகுதியை சேர்ந்த கட்டிட தொழிலாளி ஒருவர் நேற்று மாலை மதுபோதையில் தள்ளாடியபடி எடப்பாடி- பூலாம்பட்டி பிரதான சாலையில் நடந்து சென்றார். பின்னர் அவர் திடீரென சாலையின் நடுவே சாக்குப்பையை விரித்து படுத்துக்கொண்டார். அப்போது அவர் போதையில் `யாருக்காவது தில் இருந்தா என் மீது வண்டியை விடுங்கடா பார்ப்போம்' என்று கூறியவாறு படுத்திருந்தார்.

அந்த வழியாக வந்தவர்கள் தொழிலாளியிடம் அங்கிருந்து எழுந்து செல்லுமாறு கூறினர். ஆனால் அவர் யாரையும் பொருட்படுத்தாமல் நீண்ட நேரமாக சாலையின் நடுவே படுத்திருந்தார். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து நீண்ட போராட்டத்துக்கு பின்னர் அப்பகுதி வாலிபர்கள் சிலர் துணிச்சலுடன் செயல்பட்டு சாலையில் படுத்திருந்த போதை நபரை எழும்ப வைத்து கண்டித்து அங்கிருந்து அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story