தமிழக வெற்றிக்கழக முதல் மாநாடு எங்கு தெரியுமா..? - வெளியான முக்கிய தகவல்


தமிழக வெற்றிக்கழக முதல் மாநாடு எங்கு தெரியுமா..? - வெளியான முக்கிய தகவல்
x

கடந்த பிப்ரவரி மாதம் 2-ந் தேதி ‘தமிழக வெற்றிக் கழகம்’ என்ற பெயரில் புதிய அரசியல் கட்சியை நடிகர் விஜய் தொடங்கினார்

சேலம்,

நடிகர் விஜய் தொடங்கி உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டை சேலத்தில் நடத்த திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. இதையொட்டி சேலத்தில் மாநாடு நடத்த 3 இடங்களை அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் பார்வையிட்டார்.

கடந்த பிப்ரவரி மாதம் 2-ந் தேதி 'தமிழக வெற்றிக் கழகம்' என்ற பெயரில் புதிய அரசியல் கட்சியை நடிகர் விஜய் தொடங்கினார். இது தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த அரசியல் கட்சி அறிவிப்பின் தொடர்ச்சியாக கடந்த ஆண்டில் வழங்கியது போன்று, அரசு பொதுத்தேர்வில் சட்டசபை தொகுதி வாரியாக எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 பொதுத்தேர்வுகளில் முதலிடம் பிடித்த மாணவ, மாணவிகளை தேர்வு செய்து அவர்களுக்கு நடிகர் விஜய் கல்வி ஊக்கத்தொகையை வழங்கினார்.

அதே நேரத்தில் சமீபத்தில் நடந்த நாடாளுமன்ற தேர்தலை நடிகர் விஜய் புறக்கணித்தார். அடுத்து வர உள்ள 2026-ம் ஆண்டு சட்டசபை பொதுத்தேர்தலை சந்திக்கும் வகையில் தனது கட்சியை வலுப்படுத்தும் நடவடிக்கையில் அவர் ஈடுபட்டுள்ளார்.

இதனிடையே, தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு விரைவில் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இதற்காக இடங்களை தேர்வு செய்யும் பணி தொடங்கி உள்ளது. இந்த மாநாடு திருச்சி, மதுரை அல்லது சேலம் ஆகிய 3 நகரங்களில் எங்கு நடத்தலாம்? என அக்கட்சியின் நிர்வாகிகள் ஆலோசனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

இதன் ஒருபகுதியாக தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் நடிகர் விஜய் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாகவும், அதற்கான திட்ட வியூகங்கள் நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.

சேலத்தில் நடத்த திட்டம்?

இந்நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு சேலத்தில் நடத்தலாமா? என்பது குறித்து இடத்தை ஆய்வு செய்வதற்காக அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் நேற்று முன்தினம் சேலத்திற்கு வந்தார். பின்னர் அவர் சேலம்-நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள நாழிக்கல்பட்டி பகுதியில் உள்ள திடலை பார்வையிட்டார். தொடர்ந்து ஆத்தூர் மற்றும் தலைவாசல் பகுதிகளில் உள்ள இடங்களையும் புஸ்சி ஆனந்த் நேரில் பார்வையிட்டார். அப்போது, சேலம் மாவட்ட தலைவர் தமிழன் பார்த்திபன் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.

சேலத்தில் தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநில மாநாடு நடத்தப்படலாம்? எனவும், அவ்வாறு நடந்தால் சுமார் 10 லட்சம் பேரை பங்கேற்க ஏற்பாடு செய்யப்படுவதாகவும் அக்கட்சியின் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

தொடர்ந்து நிர்வாகிகள் கூறும்போது, சேலத்தில் மாநாடு நடத்தினால் இடம் போதுமானதாக உள்ளதா? வசதிகள் இருக்குமா? என்பது குறித்து கட்சியின் தலைமை நிர்வாகிகள் ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.

மதுரை, திருச்சியை விட சேலத்தில் மாநாடு நடத்துவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. இருப்பினும், கட்சி தலைவர் விஜய்தான் அதனை முடிவு செய்து அறிவிப்பார்' என்றனர். இதனால் சேலம் மாவட்ட விஜய் ரசிகர்கள் மற்றும் அக்கட்சி நிர்வாகிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


Next Story