தேவர் ஜெயந்தி: வருகிற 30-ந் தேதி விருதுநகரில் இருந்து பசும்பொன் செல்வதற்கான வாகன வழித்தடங்கள் அறிவிப்பு


தேவர் ஜெயந்தி: வருகிற 30-ந் தேதி விருதுநகரில் இருந்து பசும்பொன் செல்வதற்கான வாகன வழித்தடங்கள் அறிவிப்பு
x

தேவர் ஜெயந்தியை முன்னிட்டு வருகிற 30-ந் தேதி விருதுநகர் மாவட்டத்தில் இருந்து பசும்பொன் செல்வதற்கான வாகன வழித்தடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

விருதுநகர்,

வருகிற 30-ந் தேதி 115-வது தேவர் ஜெயந்தி மற்றும் 60-வது குருபூஜையையொட்டி கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்த சமுதாய தலைவர்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் கலெக்டர் மேகநாத ரெட்டி தலைமையிலும் போலீஸ் சூப்பிரண்டு மனோகர் முன்னிலையிலும் நடைபெற்றது.

கூட்டத்தில் கலெக்டர் கூறியதாவது:-

தேவர் ஜெயந்தி மற்றும் குருபூஜையை முன்னிட்டு அரசு அறிவுறுத்தியபடி ராமநாதபுரம் மாவட்டத்தில் தற்போது தடை உத்தரவு அமலில் உள்ளதால் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வோர் வாடகை வாகனங்களில் வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

எனவே விருதுநகர் மாவட்டத்தில் இருந்து அஞ்சலி செலுத்த பசும்பொன் செல்பவர்கள் சொந்த வாகனங்களில் அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களில் மட்டுமே சென்று வர அனுமதிக்கப்படுவர். மாவட்ட நிர்வாகத்தால் தடை செய்யப்பட்டுள்ள வழித்தடங்களில் செல்லக்கூடாது.

ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், சிவகாசி, சாத்தூர், விருதுநகர், தூத்துக்குடி, கோவில்பட்டி மற்றும் நெல்லை ஆகிய பகுதிகளில் இருந்து புறப்படும் வாகனங்கள் அருப்புக்கோட்டை காந்திநகர் ராமலிங்கா மில், கல்லூரணி, எம்.ரெட்டியபட்டி, மண்டபசாலை, கானா விலக்கு வழியாக பசும்பொன் சென்று அந்த வழியே திரும்பி வர வேண்டும். ஆவியூர், காரியாபட்டி, மல்லாங்கிணறு, கல்குறிச்சியில் இருந்து வரும் வாகனங்கள் கல்குறிச்சி, பாலையம்பட்டி பைபாஸ், காந்திநகர,் ராமலிங்கா மில் கல்லூரணி, எம்ரெட்டியபட்டி மண்டப சாலை, கமுதி விலக்கு வழியாக பசும்பொன் சென்று அந்த வழியே மீண்டும் திரும்ப வேண்டும்.

திருச்சுழியில் இருந்து வரும் வாகனங்கள் ராமலிங்கா மில், கல்லூரணி, கானாவிலக்கு, கமுதி வழியாக பசும்பொன் சென்று அந்த வழியே மீண்டும் திரும்ப வேண்டும். நரிக்குடியில் இருந்து வரும் வாகனங்கள் வீரசோழன் விலக்கு, பிடாரிசேரி, பார்த்திபனூர், அபிராமம் வழியாக பசும்பொன் சென்றடைய வேண்டும். பின்னர் மீண்டும் திரும்பும்போது பசும்பொன் கோட்டை ரோடு, நகரத்தார்குறிச்சி, அபிராமம் வழியாக பார்த்திபனூர், பிடாரிசேரி, வீரசோழன் விலக்கு வழியாக வரவேண்டும். பசும்பொன் செல்லும் வாகனங்கள் கண்டிப்பாக முத்துராமலிங்கம்புதூர், மண்டலமாணிக்கம் வழியாக செல்ல அனுமதிக்கப்பட மாட்டாது.

இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.


Next Story