சினிமா ஆசை, குடும்ப வறுமை... சென்னை வந்த பெண்கள், சிறுமிகளை விபசாரத்தில் தள்ளிய இளம்பெண் - பரபரப்பு தகவல்கள்


சினிமா ஆசை, குடும்ப வறுமை... சென்னை வந்த பெண்கள், சிறுமிகளை விபசாரத்தில் தள்ளிய இளம்பெண் - பரபரப்பு தகவல்கள்
x

சமூக வலைத்தளங்கள், செல்போன் செயலி மூலமாக விபசார தொழிலை விரிவுப்படுத்தினர்.

சென்னை,

சென்னை விபசார தடுப்பு பிரிவு போலீசார் தங்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில் சென்னை வளசரவாக்கம் ஜெய்நகர் 2-வது தெருவில் உள்ள வீட்டில் சோதனை நடத்தினார்கள். அப்போது அங்கு 17 வயது சிறுமியிடம் உல்லாசம் அனுபவிக்க வந்த சென்னை மேற்கு சைதாப்பேட்டை பகுதியை சேர்ந்த ராமச்சந்திரன் (வயது 70) என்ற முதியவர் சிக்கினார்.

விசாரணையில் அவர், சென்னை தியாகராயநகர் டாக்டர் தாமஸ் சாலையை சேர்ந்த பிரபல விபசார பெண் தரகர் நதியா (37) அந்த சிறுமியை அனுப்பி வைத்ததாகவும், அதற்கு ரூ.25 ஆயிரம் அவரிடம் கொடுத்ததாகவும் தெரிவித்தார். இதையடுத்து நதியாவை விபசார தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர்.

விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்கள் வருமாறு:-

நதியா, ஆரம்பத்தில் கஞ்சா மற்றும் கள்ளச்சந்தையில் மதுவிற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளார். இதில் கிடைத்த பணத்தைவிட பாலியல் தொழிலில் அதிக பணம் கொட்டியதால் அவரே நேரடியாக இந்த தொழிலில் ஈடுபட்டு வந்தார். விபசார தடுப்பு போலீசாரிடம் சிக்கி அரசு காப்பகத்திலும் சிறிது காலம் தங்க வைக்கப்பட்டிருந்தார்.

பின்னர் வெளியே வந்த அவர், சென்னை ஆழ்வார்ப்பேட்டை டி.டி.கே.சாலையில் வசிக்கும் தனது சகோதரி சுமதி (40), அவரது 2-வது கணவர் ராமச்சந்திரன் (43) ஆகியோருடன் இணைந்து பாலியல் தொழிலை நடத்தி வந்துள்ளார். நேபாள நாட்டை சேர்ந்த மாயா ஒலி (29) என்ற பெண் இவர்களுக்கு பக்கபலமாக இருந்துள்ளார். சமூக வலைத்தளங்கள், செல்போன் செயலி மூலமாக விபசார தொழிலை விரிவுப்படுத்தினார்.

இந்த விபசார கும்பல் சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசையில் சென்னை வந்த பெண்களையும், குடும்ப வறுமை காரணமாக வேலை தேடி வந்த பெண்களையும் ஆசை வார்த்தை கூறி விபசார தொழிலில் தள்ளியது. சிறுமிகளையும் இந்த தொழிலில் ஈடுபடுத்தி உள்ளனர்.

இந்த நிலையில் விபசார தடுப்பு போலீசாரால் நதியாவின் சகோதரி சுமதி, அவரது கணவர் ராமச்சந்திரன், நேபாள நாட்டு பெண் மாயா ஒலி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். சிறுமிகளிடம் கோவை பீளமேடு பகுதியை சேர்ந்த அசோக்குமார், முதியவர் ராமச்சந்திரன் ஆகியோர் அடிக்கடி உல்லாசம் அனுபவித்திருப்பது தெரிய வந்துள்ளது.

மேலும் பஞ்சாப்பை சேர்ந்த சிங் ஒருவரும் விமானத்தில் பறந்து வந்து உல்லாசம் அனுபவித்து சென்றுள்ளார். அவர்கள் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் சிறுமிகளை விபசார தொழிலில் தள்ளிய நதியா உள்ளிட்டோர் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் குறித்து குழந்தைகள் நல குழு அதிகாரிகளும் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story